நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (16)
(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)
நவீன பார்த்சாரதியை நிறுத்தி விட்டு, இத்தாலியை நோக்கி லிவோர்னோ பாதையை எடுத்து வரும் போது, பைசா நகரம் காட்டியது. அந்தப் பாதையில் போக இறங்கினோம். (அங்கம் 15ல் லிவர்னோ போகும் பாதையில் பைசா நகரம் படத்தில் காணக் கூடியதாக உள்ளது.)
சுற்றிச் சுழன்று பைசா நகரம் அடைந்தோம். ஆயினும் உள்ளே உள்ளே கிராமம் போல ஓடி ஓடி ஒரு சுற்று மதில் கட்டிடத்தின் முன் நின்று, உள்ளே புகுவதா விடுவதாவென யோசித்து, கணவர் இறங்கி விசாரித்தார். உள்ளே செல்ல வேண்டு மென்று அறிந்தோம். இதற்கிடையில் கோபுரம் தானே, எங்கே உயரமாக ஒன்றையும் காணோமே என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி வழியெல்லாம் நான் தேடியபடி இருந்தேன். உள்ளே புகுந்ததும் வட்டமான வெள்ளைக் கட்டிடமாக மாபிளினால் உருவான சாய்ந்த கோபுரம் தெரிந்தது.
எனது கற்பனையில் அது மிக உயரமான கோபுரமாக இருக்கலாமோ என்று தான் இருந்தது. ஆனால் அது சாதாரணமான 8 மாடிக் கட்டிடமாக, ஆனாலும் அநியாயமாகச் சாய்ந்திருந்தது. மனம் கவரும் வெள்ளை நிறம், ஆடம்பரமாக இருந்தது.
அறோனா நதிக்கரையில் ரஸ்கனியில் ஒரு நகரம் பைசா ஆகும். நவீன பௌதிகவியலாளர், கலிலியே கலிலி பிறந்த இடமும் இதுவாகும்.
சரியாக வாகனம் நிறுத்துமிடம் தெரிந்து நிறுத்திவிட்டு, கவனிக்க! இங்கு எந்தவித பிரச்சனையுமின்றி வாகனம் நிற்பாட்டினோம்.
முதலில் இடத்தை ஒரு கண்ணோட்டம் விடுவோம் என்று , நான் புகைப் படக்கருவியுடன் சென்று மளமளவென படங்களைச் சுட்டேன். சனக்கூட்டமாகவே இருந்தது, திருவிழாக் காலம் போல.
என் கணவர் தங்குமிடம், நகரம் சுற்றிப் பார்த்தல் என்பவைகளைக் கவனித்தார்.
பங்களாதேஷ் இளைஞர்கள் பலர் வியாபாரம் செய்தபடி இருந்தனர். எம்மைக் கண்டதும் முகம் மலர்ந்து மிகவும் அன்பாகப் பேசினார்கள், தகவல்கள் தந்தனர். அந்த உணர்வு எமக்கு மிகப் பழக்கமான உணர்வு தான். நாடு விட்டுப் பிரிந்திருக்கும் உணர்வு தான் அது.
சுற்று வட்டத்தின் ஒரு கண்ணோட்டத்தின் பின், உள்ளே சிறிது நடை தூரத்தில், நாம் தங்கிட வாடி வீடு எடுத்தோம். இங்கு அறை எடுக்க எந்தவித சிரமமும் வந்திடவில்லை. மிகச் சுலபமாக இடம் கிடைத்தது. வாகனம் நிறுத்த தங்கும் அறைக்கு முன்னாலேயே இடமும் கிடைத்தது.
திரும்ப வந்து வாகனத்துடன் போய் களைப்புத் தீர நீராடி, ஆடை மாற்றி, மறுபடியும் கோபுரம் பார்க்க வெளியே வந்தோம்.
புகையிரதப் பெட்டிகள் இரண்டை இணைத்தது போன்ற ஒரு வாகனத்தில் பைசா நகரம் சுற்றிப் பார்த்தோம். பலரைச் சேர்த்து, அது போதும் என்றதும் ஓடத் தொடங்குகிறார்கள். பைசா மிக நல்ல பழைய கால நகரமாக இருந்தது.
பைசா நகர மக்கள் மத்தித் தரைக்கடலில் 200 வருடங்களுக்கும் முன்னர் சிறந்த மாலுமிகளாக இருந்தனர். இவர்கள் யெருசலேம், catthago, Ibiza, Makkarca, ஆபிரிக்கா, பெல்சியம், Britania, நோர்வே, ஸ்பெயின், மொறக்கோ இன்னும் பல நாடுகளைக் கைப்பற்றியிருந்தனர். இவர்களுக்கு ஒரு எதிரியாக Florance நாடு இருந்தது. இவர்கள் தங்கள் செல்வ நிலையை உலகுக்குக் காட்டுவதற்காகவே இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தைக் கட்டினார்களாம்.
1. கிறிஸ்துவப் பிரதான கோயில்.
2. ஞானஸ்நானத் தொட்டில் கட்டிடம்.
3. ஞாபகர்த்தப் புதை குளி
4. பைசா சாய்ந்த கோபுரம்.
இவை நான்கும் ஒன்றாக அருகருகே உள்ளன.
வெள்ளையடிக்கவே தேவையற்ற அத்தனை சுத்த வெள்ளை அழகுடன் இந்தக் கட்டிடங்கள் உள்ளன.
மிகுதியை அடுத்த அங்கம்16ல் பார்ப்போம்.
வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
3-2-2007.
கலாம் காதிர்
டிசம்பர் 24, 2010 @ 15:10:35
இத்தாலிச் சென்ற இனிய அனுபவம்
கோவை கவி
டிசம்பர் 24, 2010 @ 21:37:10
என்றும் மறக்க முடியாத அனுபவம். (Italien tur ) நன்றி ஐயா!