(நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (26.) இறுதி அங்கம்.
(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்தது)
வெப்பமான காலநிலையில் பிறந்து, வளர்ந்து, இங்கு வந்து 25 வருடங்கள் இந்தக் குளிரான காலநிலைக்குப் பழக்கமாகினோம்.
ரோமாபுரியின் வெப்பமான காலநிலை என் கணவருக்கு ஒத்து வரவில்லை என்பது எனக்குத் தெரிந்தது. எதையும் வாய்விட்டுக் கூறி மற்றவர்கள் உட்பட என்னையும் தொல்லைப் படுத்தும் ரகமானவர் அல்ல என் கணவர். அதற்கேற்றபடி நான் புரிந்து நடந்து கொள்வேன். எனது கணவர் கஷ்டப்படுவதும் வேர்த்து விறு விறுப்பதையும் பார்த்ததும், நாமிருவரும் மாறி மாறி வாகனம் ஓடி சுகமாக, பத்திரமாக டென்மார்க் வரவேண்டும் என்ற எண்ணம் எனக்;கு மேலோங்கியது. அதுவும் நீண்ட தூர வாகன ஓட்டம்.
எமது பயணத் திட்டத்தின் அடுத்த குறி இத்தாலி நாப்போலியாக இருந்தது. அங்கு சென்று கப்றி எனும் தீவுக்கும் செல்வது திட்டமாக இருந்தது. போகமுடியாத ஏக்கம் தந்த கப்றி தீவின் அழகைப்பாருங்கள்.
நாப்போலி போகும் எண்ணத்தைப் பலவந்தமாகக் கைவிடப் பண்ணினேன். கணவர் விருப்பம் 50க்கு 50 ஆகத் தான் இருந்தார். ரோமில் அன்று இரவு தங்கி, காலையில் பயணித்து ஒரு இரவை வீணாக்காது அன்று மாலையே டென்மார்க் திரும்புவோம் என்று, வத்திக்கான் திருத்தலமருகில் தங்கிய ஸ்ரார் ஹோட்டலைக் காலி பண்ணினோம். உடனேயே டென்மார்க் புறப்படும் பயணத்தைத் தொடங்கினோம்.
முடிந்தளவு வாகனம் ஓடியபடி தெருவோர வாடி வீடுகளாகப் பார்த்தபடி சென்றோம். தெருவோரமாக வசதியாக வாடிவீடு வர, உள்ளே சென்று கேட்டோம். இடம் இருந்தது. விலை மலிவாகவும் இருந்தது ஆச்சரியம். அங்கு இரவு தங்கி நல்ல தூக்கம் கொண்டோம். காலையுணவை முடித்து பயணத்தைத் தொடர்ந்தோம்.
2001 கி.லோமீட்டர் காட்டினார் நவீன பார்த்தசாரதியார் அங்கிருந்து நமது ஓகுஸ் நகர் போகும் தூரமென்று.
இதில் என்ன திறில் என்றால் நவீன பார்த்தசாரதியார் எந்தப் பாதையை எமக்குக் காட்டுவார் என்பது தான். பொதுவாக பிரதான பாதையையே எப்போதும் தெரிவு செய்வார்.
நாம் FIRENZA போகும் வரை எதுபாதையெனத் தெரிய வராது. அதிலிருந்து பாதை பிரியும் போது தான் தெரியும்.
இறுதியில் ஒஸ்றி;யாவுக்கு ஊடாகத்தான் நவீனபார்த்தசாரதியார் பாதை காட்டினார். நல்ல மலைநாடு தானே ஒஸ்றியா!
ஓவ்வொரு குகைப் பாதைகளும் சுமார் 2254 மீட்டர் நீளமாகவும், ஆகக் கூடியது 3418 மீட்டர் நீளமாகவும் இருந்தது. இவைகள் பென்னம் பெரிய மலையைக் குடைந்த குகைப் பாதைகள் தான்.
திராட்சைத் தோட்டங்கள் இரு மருங்கும். அதனுடாக தெருவானது செல்கிறது. அசல் தேயிலைத் தோட்டம் போல படிகள் படிகளாக திராட்சைத் தோட்டங்கள். அதாவது திராட்சைப் பந்தல்கள் அந்த அழகைத் தந்தன.
10 வயதுப் பிள்ளை எட்டிப் பறிக்கும் அளவு தான் திராட்சைக் கொடிகளின் உயரம். ஊரில் நாம் பார்த்தது, ஒரு பெரிய மனிதன் அளவு உயரமான திராட்சைப் பந்தல் தானே! இடையிடையே வைன் தொழிற் சாலைகள்.
Bologna, Modena, Verona< Montova எனும் நகரங்களுடாக ஓடினோம்.
வெரோனா மலைத் தொடர் ஒரே கல்லு மலைத் தொடராக இருந்தது.
றொவேறிற்ரோ எனும் மலைக் குன்றில் ஒரு கோட்டை இருந்தது தெரிந்தது. ஒரே மலை மலைக் காட்சிகள தான். மிகவும் கண்ணைக் கவர்ந்தது அதன் எழில். குளிர்மையாகவும் இருந்தது. கண் முன்னாலே எதிரில், இரு பக்கமுமாக மலைகள் தான்.
ஓஸ்றியாவைப் பார்த்த பிறகு, இப்போது ஒஸ்றியா தான் மிக அழகான இடமாகத் தெரிந்தது. vils எனும் கிராமத்தில் உடைத்த கல்லுகள் மின்சாரக் கம்பியூடாக ஒரு மலையிலிருந்து மறு பகுதி மலைக்கு தானியங்கியாகச் செல்வது தெரிந்தது.
Brenner எனும் நகரம் மிக அழகாகத் தெரிந்தது.
21-8-06 திங்கள இரவு ஒஸ்றி யில் ஒரு வாடிவீட்டில் தங்கினோம். நிம்மதியான இரவு,
காலை எழுந்து யன்னலைத் திறந்தால் அழகான பென்னம் பெரிய மலை கண் முன்னால். அழகான ஒரு வாடிவீடும் தான். காலை 9 மணிக்கு அங்கிருந்து பயணமாகிப் புறப்பட்டோம்.
10.20 க்கு nஐர்மனி வந்துவிட்டோம். aalan-westhausen யேர்மனியிலும் நீண்ட நேரத்தின் பின் ஒரு சுரங்கப் பாதை ஒஸ்றியாவில் கண்டது போலக் கண்டோம். முஞ்சனுடாக 22-8-06 சுகமாக டென்மார்க் வந்தடைந்தோம்
ரோம் தாண்டியதும் கணவரும் சுறு சுறுப்பாக வந்திட்டார். காரணம் அந்த ரோம் நகர வெப்பக் காலநிலை மாறியது தான் காரணம்.
நல்ல ஒரு பயணமாக இது அமைந்தது. அதை உங்களுடன் பகிர்ந்தது இன்னும் மகிழ்வு தான். இலண்டன் தமிழ் வானொலியூடாக எனது குரலில் இதை கிழமை தோறும் வாசித்திருந்தேன். நிலையத்திற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
விரைவில் தாய்லாந்துப் பயண விவரணம் எனது வலையில் தொடரும் இதுவும் இதே வானொலியில் வாசிக்கப்பட்டது தான்.
வணக்கம்.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-4-2007.