ஆதரவிற்கு நன்றி!..நன்றி.
”..எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..” -(குறள்)
எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண் என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
நான் மகிழும் எழுத்தால் உலகம் என்னோடு மகிழ்வது ஆனந்தம்..ஆனந்தமே!
எழுத எழுத பயிற்சி தானே!
ஏகாந்தமான என் உன்னத
எண்ண மின்னல்கள் அறிவு
உழவின் விளைச்சல்.
விளைச்சல் கொட்டிக் கிடக்கும் எனது வலை 1-7-2010ல் தோற்றமாகி ஒரு வருட நிறைந்துள்ளதையொட்டி இந்த ஆக்கம் எழுதுகிறேன்.
என்ன தான் நடக்கிறது!…. என்று எல்லோருக்கும் ஆர்வம் எழுவது இயல்பு தானே!
ஒருவர் 100வது ஆக்கம் இடும் போதோ அன்றி 150 – 200வது ஆக்கமிடும் போதோ பெரிய கொண்டாட்டமாக பரபரப்பாக வலையுலக மக்களுக்கு அறிவித்து, ஆசீர்வாதம் வாங்கும் வழமையுள்ள உலகில் நானும் என் வலை பற்றி சிறிது கூற விரும்புகிறேன்.
இந்த ஒரு வருடத்தில் (18046) பதினெட்டாயிரத்து நாற்பத்திஆறு பார்வையாளர்கள் வந்துள்ளனர். 27.7.2011 இது வேட் பரஸின் பதிவு. இன்றைய பார்வையாளர் ஆம் 108 ஆகியது. ஆடி 24ம் திகதி 207 பேர் வந்து பார்த்துள்ளனர். இதுவே நேற்றுவரை அதிகரிப்பான தொகை. வழமையாக ஒரு நாளிற்கு வலையைப் பார்வையிட 60 பேர், 150 பேர், 170 பேர்களென வருவார்கள்.
நேயர்கள், நீங்கள், அன்புள்ளங்கள் இட்ட கருத்துகள் 27-7-2011 மாலை 7 மணி வரை 1196 பின்னூட்டங்கள் வந்துள்ளன.
மௌனம் பசை தடவாத வார்த்தை ஊர்வலத்தின் பாதையில்… என்ன!…நான் எத்தனை தலைப்புகளிட்டு எழுதியுள்ளேன் என்றால்….21 தலைப்புகளில் (கற்றகறி) எழுதியுள்ளேன். (அண்மைய இடுகைகளுக்குக் கீழே பார்த்தால் தெரியும். அதில் என்னைப் பற்றியும் சேர்த்து விடுங்கள்.)
கவிதைச் செங்கோல் ஏந்தி பாக்களை, கலப்புச் சுவையாகவும் (பாமாலிகை கதம்பம்) கவிதையை (பாமாலிகை) தனித்தனி பிரிவாகவும் எழுதுகிறேன். முதல் 265 கவிதைகள் (கதம்பமாக) வலையேற்றினேன். இனி பாமாலிகை கதம்பம் பகுதி- 2 என்று, ஒன்றிலிருந்து போடத் தொடங்குகிறேன்.
இதில் இன்னொரு மகழ்ச்சியான விடயம் நானாக வரைந்து பாவித்த அழகான படங்கள் பலவற்றை கூகிள் நிறுவனம் தனது தமிழ் படம் தேடல் பகுதிக்கு சேர்த்துள்ளது. இது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
பாமாலிகை – கவிதை மாலை.
உறவு சிநேகிதம் என்று உலகில் பயணிக்கிறோம். கூடிக் கையிணைத்து வருபவர்களும், விட்டு விட்டு ஓடுபவர்களும் என்று பல விதமானவர்கள். நம்பிக்கை, முயற்சிகளின் நட்பு கூட வரும் போது பயணம் இனிக்கிறது. ஏமாற்றம் வருவதில்லை.
தான் எனும் சுயநலம் செறிந்த கூட்டுப் புழு நிலை மாறி, அதை உடைத்த பட்டாம் பூச்சிப் பக்குவ நிலை கொண்டு தமிழ் வானில் பறக்கும் நிலை இது.
இத்தனை நேயர்கள் அன்புள்ளங்களின் ஆதரவினால் தான் நான் இவ்வளவு தூரம் வர முடிந்தது. ஆதலால் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றியை இங்கு கூறி மகிழ்கிறேன்.
துன்பத்தைத் தூக்கிலேற்றும் இன்பப் பயணத்திற்கு மேலும் உங்கள் ஆதரவு பல்கிப் பெருகுக என்று ஆண்டவனை வேண்டுகிறேன்.
உங்களனைவருக்கும் இறை ஆசி கிட்டட்டும்.
நன்றி! நன்றி! நன்றி!
கற்றது கைம்மண்ணளவு.
சற்றதைச் சிந்தித்து எம்
சிற்றறிவை நாளும் பெருக்கலாம்.
வற்றாத அறிவு விற்றாலும்,
வெற்று மனிதனாகிலும் போகாது.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-7-2011.
0.000000
0.000000