இந்த முறை வெற்றி பற்றிய ஆக்கம் தான்.
இப்போதெல்லாம் எமது மகன் வீட்டுள்ளே போனதும் பேரன் வந்து எமது கையைப் பிடித்து வெளியே போக வரும்படி இழுப்பார். வெளியே உலாத்த மிக விருப்பம். நான் அவரோடு தனியே போனால் ஏதாவது ஓரு ராகத்தை ம்..ம் என்றோ. லாலலா என்றோ இழுத்தபடி செல்வென் இது வழமை.
இவர் வீட்டில் தானே விளையாடும் போது என்னைப் போல இராகம் இழுப்பார். பெரிய அனுபவஸ்தர் போல செய்வார்.
பாடல் கேட்டால் போதும் சுற்றிச் சுற்றி ஆடுவார். தலை சுற்றி விழுவார் உடனே எழுந்து மறுபடி தொடருவார். பாடலுக்குக் கை தட்டுவார்.
என்னிடம் ”..சீச்சோ சீச்சோ..” என்பார் அதன் கருத்து சோபாவிலிருந்து அவரைக் காலில் வைத்து ஆட்டுவது.
Sea shore
up and Down
vethri going to the London town (இதை மாற்றி மாற்றி வேறு இடங்கள் கூறிப் பாடுவதுண்டு.)
மரக் குதிரை ஆடுவார் அதற்கு ஓரு பாட்டு.
குதிரை ஆட்டம்.
ஆடுங்கோ ஆடுங்கோ
குதிரை ஆடுங்கோ
வெற்றி ஆடுங்கோ!
சிரித்து ஆடுங்கோ
சிவப்புக் குதிரை
மரக் குதிரை (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ
முன்னும் சாய்ந்து
பின்னும் சாய்ந்து
இன்னும் வேகமாய்
உன்னி உன்னி ஆடுங்கோ
வெற்றி ஆடுங்கோ
குதிரை ஆடுங்கோ. (ஆடுங்கோ)
வெற்றிக்குட்டிக்கு நான் பாடும் பாட்டு. உடனே சிரித்து (here she goes Again)
எந்த நிலையிலிருந்தாலும் அதற்கேற்றமாதிரி ஆடுவார்.
”….வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி
எண்ணிப் பார்! எண்ணிப் பார்!
வண்ணம் பலவே வண்ணம் பலவே
எண்ணம் கிளறுது! எண்ணம் கிளறுது!…”’
(ஆங்கில வரிகள் நாம் முன்பு சிறு வயதில் பாடியது. தமிழ் எனது வரிகள் தான்.)
இப்பொது பேரனுடன் இருக்கும் போது ஏதும் வாசித்தால் அவரும் வந்து வாசிப்பார். புத்தகம் கிழிப்பார்.
நான் பென்சிலும் பேப்பரும் கொடுத்து விட்டால் கீறுவார்.
மிகவும் ஆனந்தப் படுவார். கை தட்டி உற்சாகப் படுத்துவேன்.
விரல்கள் கட்டுப் பாட்டிற்குள் இல்லாததால் நேர் கோடான கீறல்கள் தானே ஆரம்பம்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-7-2013