நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (18)
(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்து)
இந்த பைசா சாய்ந்த கோபுரத்தை, 2வது உலகப் போரில, நாசிகள் அவதானிக்கும் நிலையமாக observation post ராகப் பாவித்தார்களாம்.
இன்னொரு சோகம் என்ன வென்றால் 1392ல் பைசா நகரப் பரம எதிரியான புளோறன்சுக்கு இக் கோபுரம் விற்கப்பட்டதாம். பைசா மக்களும் புளோறன்சுக்கு அடிமைகளானார்களாம். இத்தோடு பைசா சரித்திரக் கதை முடிவடைந்ததாம்.
நமது பெருவிரல் அளவிலிருந்து பல வித அளவுகளில் பைசாக் கோபுரமும், அதன் சுற்று வட்டக் கேபுரங்கள் அனைத்தும் உருவமாக அழகழகாக விற்கிறார்கள்.
நாம் பைசா நகரைச் சுற்றிப் பார்த்த போது Arono நதிக்கரையில் திடீரென நமது புகைவண்டி வாகனம் ஏதோ பிழையாகி ஓட முடியாது நின்று விட்டது.
அடடா! நாம் நடந்து போக வேண்டுமோ என எண்ணிக் காத்திருந்தோம். சாரதியார் இன்னொரு என்சின் பெட்டியைக் கொண்டு வந்து கொழுவினார். பின்னர் வண்டி யோராக ஓடியது.
இரவு ஒளியிலும் பகல் போல மிக அழகாக மக்கள் பரவி நின்றிருந்தனர்.
கடைகள் நமது ஊர் போல நடை பாதைக் கடைகளாக இருந்தது.
அழகிய கைப்பைகள் இருந்தது, அவை யானை விலை, குதிரை விலையாகத் தான் இருந்தது. வானில் தமது சாமான்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டு வானை நான்கு புறமும் திறந்து தட்டுகள் அடுக்கி, அதையே ஒரு கடை போல ஆக்கித் தமது பொருட்களை விற்கிறார்கள். இரவு கடை மூடும் போது சுத்தமாகத் துடைத்து விட்டது போல அந்த இடத்தை விட்டுத் தமது வாகனத்தில் சென்று விடுகிறார்கள்.
கூரையற்ற திறந்த வெளியில் பிசா கடைகள், சலாட், நூடில்ஸ் தான் உணவுகளாக இருந்தன. நன்றாகச் சுற்றிப் பார்த்த பின்பு இரவு உணவை அப்படி ஒரு கடையில் உண்டோம். பின்னும் சிறிது நடந்து திரிந்து விட்டுச் சிறு நடை தூரத்தில் உள்ள தங்குமிடம் சென்றோம்.
மறு நாள் காலை 9.30 க்கு ரோம் நோக்கிப் பயணமானோம்.
அப்படியே போய்க் கொண்டிருந்த போது நவீன பார்த்தசாரதி வழி காட்டியும், நாம் பாதையைத் தவற விட்டு விட்டோம் என்பது புரிந்தது. தொடர்ந்து ஓடித் தூரப் போய்விடாது, பக்கத்துப் பாதையில் இறங்கினோம். அப்படியே ஓடி ஒரு இடத்தில் நிறுத்தி விசாரித்த போது, அந்தப் பாதை வத்திக்கான் நோக்கிப் போவதாக அறிந்தோம். அது ரோமுக்கு அருகாமையான இடம் தான். பரவாயில்லை, அதுவும் போக வேண்டிய இடம் தானே என்று, அப்படியே வத்திக்கான் நோக்கி ஓடினோம்.
இத்தாலிக் காலநிலை என் கணவருக்கு தொல்லை தந்தது. வியர்வை ஆறாகப் பெருகி கணவரது மேலாடை நனைந்தது.மேலாடையைக் களட்டிவிட்டு, பனியனோடு வாகனம் ஓட்டினார். அப்படியே ஓடி ஓடி வத்திக்கானை அடைந்தோம். தலை நிமிர்ந்த போது மேலே வத்திக்கானின் கோபுரம் பிரமாண்டமாகத் தெரிந்தது.
சரி, தங்குவதற்கு இடத்தைத் தேடினோம். 2, 3 இடங்கள் பார்த்தோம். இறுதியில் அருகிலேயே இருந்த ஆடம்பர வாடி வீட்டைத் தெரிவு செய்து, பொருட்களைக் கொண்டு போய் வைத்து விட்டு, நடை தூரத்தில் இருந்த வத்திக்கான் கோயிலை அடைந்தோம்.
அம்மாடி! பிரமாண்டமான கட்டிடங்கள்! இத்தாலியர் கட்டிடக் கலையில் தலை சிறந்தவர்கள் என்பது எள்ளளவும் சந்தேகமற நிரூபணமாய்த் தெரிந்தது. அதைவிட இது ஒருநாள், இரண்டு நாளில் பார்க்கும் இடமுமல்ல என்பதும் புரிந்தது.
அடிக்கொரு தடவை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளும் அங்கு வட்டமடித்துச் சென்ற படியும் இருந்தது
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
17-2-2007.
0.000000
0.000000