245. வையகம் எமக்காக.

 

வையகம் எமக்காக.

 

விரிந்த மலர்களின் சுகந்தமும்
சரிந்த நதிகளும் ரசிக்கவே.
பூமியில் நான் பிறந்தேனா!
பூமி எனக்காய்ப் பிறந்ததோ!

குயிலின் இனிய குரலில்
மயிலின் அழகிய ஆடலில்,
கடலின் அலைகள், காற்றின்
பாடலில் தெய்வம் வாழ்கிறது.

பொழியும் மழையின் இதமும்
விழியில் தவழும் நிலவும்
மொழியின் இனிய தழுவலும்
அழியாத இயற்கைக் கிரீடங்கள்.

இத்தனை இதமாம் நந்தவனத்தில்
வார்த்தையின் வீரிய விரிசலில்
அர்த்தங்களில் மூர்க்கம் விரித்து
தர்க்கங்கள் எதிர்வாதங்கள் ஏன்!

கீர்த்தியுடை பாதை விலகாது
நேர்த்தியுடன் முரண்பாடின்றி
அருத்தமுடை உலகப்பூங்காவில்
சொர்க்கமுடை மார்க்கம் தேடலாமே!

வையகம் எமக்காக. நன்கு
கையகப்படுத்தி வாழ்ந்தால்
பையப் பையவே சிகரம் தொடலாம்!
மையப் புள்ளியாய் உயரலாம்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-8-2012.

30/10/2012-T

 

                               
 

28. இது நான்காவது விருது.

 

இது நான்காவது விருது.

jaghamani

ஆவ 20, 2012 @ 12:50:21 [Edit]

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

என்று கருத்திடல் வந்தது.
திரு வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவின் வலைக்குச் சென்று பார்த்தேன்.

http://gopu1949.blogspot.dk/2012/08/12th-award-of-2012.html

 

இந்தப் பரிசு எனக்குத் தந்திருந்தார்
அதற்கு நன்றிப் பதிவிட்டு திரும்பினேன் .
மறுபடியும் இந்தப் பதிவின் மூலம் எனது மகிழ்வாக நன்றியைக் கூறுகிறேன்.

இது எனக்கு 4வது பரிசு.

முதலாவதாக  முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தந்த சிந்னைச் சிற்பி விருது.  அதில் மிக மகிழ்வடைந்தேன். 4-8-2011.

குணா தமிழ் இணையத்தள மூலமும். 4-8-2011-

இரண்டாவதாக….திரு.வே.நடனசபாபதி லிப்ஸ்ரர் விருது தந்தார். (தினம் எளிய நடையில் கவிதையையும், புதிய தகவல்களையும் தரும் திருமதி வேதா.இலங்காதிலகம்
அவர்கள்.)

மறுபடியும் 3வதாக திருமதி இராஜேஸ்வரி லிப்ஸ்ரர் விருது தந்தார்.

அனைவருக்கும் மறுபடியும் அன்புடன் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-8-2012.

                                         

 

35. வெற்றி மடந்தை.

photo-A.vikatan, Thank you.

 

வெற்றி மடந்தை.

 

பெண்:-
அறுகம் புல்லு வரப்பிலே
மறுகி மறுகி நடப்பவரே
அறுத்தெடுத்த  வல்லாரையை
இறுகக் கட்டித் தாருமய்யா.

பொழுது சாய முன்னாலே
அழுது பிள்ளை வரமுதலே
உழுது நீரும் வாருமய்யா
தொழுது சமையல் முடிக்கிறேன்.

சீவல் பாக்கு முடிந்துதய்யா
ஆவல் மீறுது வெத்திலைக்காய்
சீவல் கொஞ்சம் தாருமய்யா
சிவக்க வெத்திலை போடணுமே!

ஆண்:-
சற்றே வாவேன் மரநிழலில்!
சாவகாசமாய் இருப்போமே!
சுருக்குப் பையின் சீவலை
சுருக்கா உனக்குத் தருவேனே.

வெற்றி மடந்தையாய் நெஞ்சிலே
வெற்றிடம் நிரப்பும் பெண்ணே!
வெத்திலை மாயத்தால் சிவக்கும்
வெற்றி முகம் காண வா!

ஆறுதல் வார்த்தை பேசி
மாறுதல் சிறிது தா!
பீறுதலாகும் உற்சாகமெனக்கு
ஊறுதடி அன்பு உன்மீது!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-8-2012.

 

 

                                        

 

 

4. பயணம் மலேசியா -7

google photo.

 

4. பயணம் மலேசியா – 7

கடந்த அங்கத்தில் சைபர் யெயா குளம் பற்றிக் கூறினேன், புத்ரா ஜெயாவில் புத்ரா ஜெயா குளம் என்றும் கூறப்படுவது.

(சகோதரி மகேஸ்வரி பெரியசாமி புத்ரா ஜெயா என்ற உச்சரிப்பைக் கூறியிருந்தார்)

உண்மையில் சைபர் ஜெயா எனும் ஒரு பட்டினமே அங்கு உள்ளது. (செபங், செலங்கூர் மாவட்டத்தில்). இது மலேசியாவின் சிலிக்கோன் பள்ளத் தாக்கு(silicon vally of Malaysia    ) என்று அழைக்கப் படுகிறது. 750 சதுர கிலோ மீட்டர்(300 சதுர மைல்) இதன் அளவு.  மல்டி மீடியா சுப்பர் கொறிடோர் (multy   media super corridor  –   MSC ) என்று அழைக்கப்படுகிறது. இனி இங்கு வருவோம்.

மலேசிய அரச மாளிகை பார்த்த பின்பு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற தேவை வந்தது. சுற்றிச் சுற்றி கோலாலம்பூர் சிட்டி சென்ரருக்கு வந்தோம். சுற்றிச் சுற்றி வரும் போது

my photo.

ஒவ்வொரு வட்டமாக பெட்றோனாஸ் இரட்டைக் கோபுரத்தை நெருங்கினோம்.

my photo.

வானம் மிகத் தெளிவாகவும், எமது இலங்கைக் காலநிலை போல  வெயிலும் இருந்தது.

நெருங்க நெருங்க 3 கட்டத்தில் இரட்டைக் கோபுரத்தை வாகனத்தில் இருந்தபடி படம் எடுத்தேன்.

my photo.

பாருங்கள்.

கடந்த தடவை இரட்டைக் கோபுரத்திற்கு அருகில் உள்ள புல்வெளியில் நின்று பார்த்தோம். அது தான் காதல் காட்சிகள்  சினிமாவில் எடுக்கும் புல்வெளி.

இந்த முறை இரட்டைக் கோபுரத்தின் அடிப்பாகத்தில்.

our photo.

6 மாடிக்கட்டிடம். சூரியா கேஎல்சிசி பல் பொருள் அங்காடி உள்ளது.

இரட்டைக் கோபுர அடிப்பாகத்தில் நிற்கிறோம் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. நானும், மகளும் – துணைவரும் உள்ளே புகுந்ததும் சாலையில் (hall) படங்கள் எடுத்தோம்.

our photo.

our photo.

என் கணவர் மறுத்தார். உள்ளே கந்தோர் வாசலில் ” இங்கே திரும்புங்கோ!” என்று ஒரு படம் தட்டினேன்.

my photo.

இங்கு தான் அதிகாலை 3 மணிக்கே தூங்காமல் வந்திருந்து. நாளும் 150 நுழைவு அனுமதிச் சீட்டு (டிக்கட்ஸ்) இலவசமாக தருவினமாம், நாளும் 1700 பேர் உள் நுழைய அனுமதி உண்டாம் – இரட்டைக் கோபுரம் மேலே ஏறிப் பார்க்க.

ஆனால் 9 மணியளவில்தான் மேலே ஏற முடியுமாம்.

1998ல் சீசர் பெல்லி எனும் கட்டிடக் கலைஞனால் இது கட்டி முடிக்கப்பட்டதாம். துருப்பிடிக்காத உருக்கும் கண்ணாடியும் கொண்டு கட்டப்பட்டதாம்.

இதை நேரில் பார்க்க அழகாக, அருமையாக உள்ளது. ஏதோ இந்திர லோகம் போல தோன்றுகிறது கட்டிட தோற்றம்.

88 மாடிகள் கொண்டது இரட்டைக் கோபுரம். 42வது மாடியில் (170வது மீட்டரில்) இரு கோபுரத்தையும் இணைக்கும் ஆகாயப் பாலம் உள்ளது. (     )

இனி சூரியா சொப்பிங் சென்ரர் பற்றிப் பார்ப்போம். இதற்கு கூகிள் படங்களே தரப்போகிறேன்.

google photo.

முதலே கூறியது போல 6 மாடிக்கட்டிடம். 3 பெரிய அங்காடிகள் உள்ளதாம்.

google photo.

அருகருகே  மீன்களின் காட்சியகம், (எல்லாம் நடக்கும் தூரங்களிலேயே உள்ளதாம்).
3வது மாடியில் கலையரங்கு , சினிமா தியேட்டர் 12 திரைகளுடன், 2400 இருக்கைகளுடன் உள்ளதாம்.

goole photo.

கீழே வாகனத் தரிப்பிடமும் உள்ளதாம்.
அடித்தளம் 2வது தட்டில் உணவகம். இங்குதான் சென்று சாப்பிட்டோம்.
சாப்பிட்டு முடிய சுற்றிப் பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு விலகினோம்.

அங்கம் 8ல் மிகுதியைப் பார்ப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-8-2012.

                          

45. தேனீ

 

 

தேனீ

சுறுசுறுப்பிற்குத் தேனீ
விறுவிறுக்கக் கொட்டுவாய் நீ.
அறுங்கோண வாழிடம்
நறுந்தேன் பிறக்குமிடம்.

இல்லம் தேனடையுள்ளும்
நல்ல கட்டுப்பாடும்,
வல்ல கூட்டு முயற்சியும்,
அல்லலில்லா நிர்வாகமும்.

புழுப் பருவம் லாவா.
குழுவிற்பெரிது ராணித்தேனீ.
புணர்தலொருமுறை. – நாளும்
1500 – 3000 முட்டைகளிடும்.

பறந்து புணர்ந்த பின்
சிறகுதிரும் ஆணிற்கு.
இறுதியிலிறக்கும். – சாவிற்கு
திறப்பு புணர்தல்! வியப்பு!

சோம்பேறித் தேனீ ஆண்.
சேகரிக்கார் தேன்.
கொடுக்கு இல்லாதவர்.
பேரின ஈ வகையார்.

உணவிருக்குமிடத்தை,
திசையை, ஆபத்தை
அசையும் நடன மூலம்
இசைந்து பரிமாறுவர்.

மலைத் தேனீ
கொம்புத் தேனீ
அடுக்குத் தேனீ
கொசுத் தேனீ

மேற்கு, கிழக்குலகத்
தேனீக்கள் பலவகை.
தேன் கூடுகளென்றும்
பெண் இராச்சியமாம்.

மணிக்கு 40 கி.மீட்டராம்
பறக்கும் வேகம்.
மலட்டுத் தேனீக்கள்
வேலைக்காரத் தேனீக்கள்.

முப்பத்தைந்து மில்லியனாண்டுக்கும்
முன்னிருந்தே வாழ்பவையாம்.
தேன் கரடிக்குப் பிரியம்.
தேன் தேன் தித்திக்கும் தேன்.

உடலிலிருந்து வெளியாகும்
மெழுகே தேன் கூடாகிறது.
தேனியின் திசையறி கருவி
மாநிலத்தினொளி சூரியனாம்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-8-2012.

                                            

34. சுமையில்லா இன்னலோ!

 

சுமையில்லா இன்னலோ!

 

சேலைத் தாமரை பார்வை
நூலைக் கதிராயெறிந்து
காலை மாலையின்றி எழுதுகிறதே
ஓலை காதல் காதலென்று.

தினம் தினம் தீ மூட்டிக்
கனன்றென்னைக் கவிழ்க்கும்
கதிர் – காதல் தீயென்ன
கலவரமா! கும்மாளமா! சொல்!

தயங்கள் இடம் மாறி
இமை மூடா நினைவூறி
எமைத் தாக்கும் மின்னலோ!
சுமையில்லா இன்னலோ!

குருதி நாளங்கள் குதித்து
அருவியாயோட, தினம்
மருவும் எண்ணங்கள் புது
உரு தரும் உடலிற்கு.

சிறகு விரிக்கு முணர்வு
பிறகு பிறகென்று பொறுக்காது,
துறவு கொள்ள எண்ணாது
உறவு உறவென்று தேடும்.

பார்வை பார்த்துக் கலக்குது
தீண்டத் தீண்ட மலருது.
இளமைப் புதையல் ஆய்ந்திட
உளமிணைத்துத் துள்ளுது.

பையப்பைய எனை மறக்க
மையல் தீர மடி சாய
கையைக் கொடு! அருகிரு!
வை கை! கைவை!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-8-2012.

 

                               
 

4. பயணம் – மலேசியா. 6

google photo
Seri  Wawasan cable suspension bridge.

4. பயணம் – மலேசியா. 6

கடந்த அங்கத்தில் இஸ்லாமிய கோவிலுக்கு முன் மகளவையும் நாங்களும் படம் எடுத்தது பார்த்தீர்கள். அதன் அடுத்த தோற்றம் சிறிது தூரமாக உள்ள கூகிள் படம் பாருங்கள்!

google photo

இதில் இந்தப் பெண்மணி நடக்கும் பாதை வழியாக இப்படியே கீழே நடந்து சென்று வாகனங்கள் நிறுத்திய இடத்தினூடாக

வலது புறப் படிகளில் இறங்கினால்  சைபர் யெயா (ciber jeya lake) குளம் வரும்.
இதில் படகுச் சவாரி செய்யலாம். ஆனால் பயணம் 45 நிமிடங்களுக்கு மேல் வருமாம். சாரதி எங்களிற்கு அங்கு செலவழிக்கத் தந்தது ஒரு மணி நேரமே. மதிலோடு ஓரமாகப் போய்ப் பார்த்து படங்களை எடுத்தோம்.


இங்கு 9 பாலங்கள் இருந்ததாக வாசித்தேன். இதில் குளத்தினூடாக சிறீ வாவாசன் கேபிள் சஸ்பென்சன் பாலம்(Seri Wawasan cable  suspensan bridge  )தூரத்தில் காணத் கூடியதாக இருந்தது.

பார்க்க மிக வித்தியாசமாக அழகாகவும் தெரிந்தது. (உண்மையில் இதெல்லாம் பாலத்தினூடாகச் சென்று கிட்டப் பார்த்து ரசிக்க வேண்டியது. ஒரு முழு நாளை அங்கு நாம் கழி(ளி)த்திருக்கலாம்)

இப்பாலம் – பயணிக்கும் ஒரு கப்பலின் தோற்றம் போலத் தெரியும்.

google.photo.

நடை பாதை, சைக்கிள் பாதையென 3 ஒழுங்கைகள் கொண்டதாம். 2003ல் கட்டி முடிக்கப்பட்டதாம். நீளம் 0.15 மைல்கள்.  கேபிள்களினால் உருவாக்கப்பட்டது. மிக மிக அழகு. நிச்சயம் நீங்கள் கூகிள் படத்தில் ஆங்கிலத்தில் பாலப் பெயரை அழுத்திப் பாருங்கள் அற்புதம்!அசந்து விடுவீர்கள்! மயில் போலவும் தோன்றும்! (நானே அசந்து விட்டேனே!) இதுவும் நிச்சயம் இந்திய சினிமாவில் காதல் காட்சியில் வந்த பாலம் தான்.

மறுபடியும் படிகளால் ஏறி

மேலே போய் புட்ற யெயா சதுக்கத்தில் நின்று (எதைப் படம் எடுப்பது எதை விடுவது என்று புரியாத தடுமாற்றம்.

அழகு! அற்புதம் தான்! அனைத்தும்)சுற்றிப் பார்த்து விட்டு அடுத்தாக

மலேசிய அரச மாளிகையை (இஸ்ரானா நிகர       )ஒரு பார்வை பார்க்கலாம் என்று புறப்பட்டோம். முதற் தடவை போன போது நாங்கள் பார்த்திட்டோம். மகளவை பார்க்கட்டும் என்று சேர்ந்து சென்றோம்.

உள்ளே போக முடியாது. வாயில் காவலர், தூரத்து மாளிகை, சுற்றி வர புல்வெளி பூங்கா நீரூற்று என்று பார்க்க முடியும். எக்கச்சக்க உல்லாசாப் பயணிகள் பெரிய பேருந்துகளில் வந்து இறங்கி படமெடுத்த படியுள்ளனர்.

 

நாமும் அதையே செய்தோம்.
காவலர் வெள்ளையும், பிரித்தானிய காவலரின் உடை மாதிரியும் அணிந்துள்ளனர். கடமை கால்நடையாகவும், குதிரையிலும்.

அரசமைப்பு இராசாக்களின் கீழ் உள்ளது. யோகூர், கெடா, கெலந்தீன், நிகிறி, பகாங் (இந்த மாநிலத்தில் எனது அப்பப்பா- முருகேசு.சுவாமிநாதர்  ஒரு ஆங்கிலப் பாடசாலையைத் தொடங்கி ஆசிரியராக இருந்து அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்து 1908ம் வருடம் இலங்கை திரும்பியவர்.இப்போது அது பெரிய ஆங்கிலப் பாடசாலையாக உள்ளது.) பெறாக், பேலிஸ், செலங்கூர், செம்பிலான், ரெறெங்கனு என்று 9 பிரிவாகவும்,

4 சுதந்திர நிர்வாகமாக

– மலாக்கா, பினாங், போர்ணியோவின் பகுதி சபா, சரவாக் என்றும், 

5 வருடத்திற்கொருமுறை பிரதம மந்திரியைத் தெரிவு செய்கிறார்கள். அரசனே பிரதானமாகவும் பிரதம மந்திரியுடன் சேர்ந்து மந்திரி சபையை அமைக்கிறார்.

மிகுதியை அங்கம் 7ல் பார்ப்போம்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-8-2012.

புட்ற யெயா சதுக்கம்

                                 

 
 

3. குழந்தை மனிதனாகும் எத்தனம்!

 

 

குழந்தை மனிதனாகும் எத்தனம்!

அசையும் பதுமையாய்க் கிடந்தார்.
தசையும் வைத்தது வளர்ந்தார்.
வசைத்து(வளைத்து)முழங்காலைக் கைகளால்
வசதியாய்த் தொடுகிறார்! – கைகளை
வசமாயதில் ஆறப்போடுகிறார்.

கைகள் இரண்டும் பிணைந்ததைப்
பைய அசைத்துப் பார்க்கிறார்.
மைகரம்!(பிரமிப்பு)…எப்படிப் பிணைந்தது!
இப்படி ஏனிது பிணைந்தது!
பிணைப்பையழகாய் ரசிக்கிறார்!

விரல்கள் பத்தும் பின்னுவது
தரமானவொரு ஆட்டமாகிறது.
விரல்களிணைப்பு விலகினால்
திரண்டு மறுபடி இணையுமோ!
பிணைந்தபடியே ஆய்வு! வியப்பு!

எப்படி! தனியொரு விரலைச்
சூப்புவது! வாயினுள் திணிப்பது!
முப்பொழுதும் பிரம்மப் பிரயத்தனம்!
செப்படி வித்தையாயொரு நாள் விழுந்தது
அப்படியே விரல்கள் வாயினுள்!

வலைப் பந்தை இலக்காக முயன்று
வலையுள்ளிடும் முயற்சி போன்றது.
எந்த உதவியுமின்றிக் குழந்தையின்
சுதந்திர இச்சைத் தேடல்!
நானே மனிதனாகும் ஆய்வு!

இன்று பத்து விரல்களையும்
உண்பது போன்று வாயினுள்
என்னமாய்மென்று சூப்புகிறார்!
மென்னும் சுவையிசை கூட்டி
சின்ன ராகமொன்றும் இசைக்கிறார்!

இம்மாநிலத்தில் குழந்தையெழுந்திட
தம்மைத் தாமே உருவாக்கிட,
மேம்பட எத்தனை பாடுபடுகிறார்!
சும்மாவல்ல! சுயேச்சையான
செம்மை முயற்சி! முயற்சி!

குழந்தையின் விடாமுயற்சியின்
கழஞ்சு அளவில் பெரியவர்கள்
வழக்கமாகக் கொண்டு பழகினால்
வழக்கற்றுப் போகுமே நோய்கள்!
முழவு கொட்டுமே ஆரோக்கியம்!

 
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-8-2012.

(our photoes.)

(7-8-2012 செவ்வாய் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை நேரத்தில்(19.00-20.00) இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.)

 

                                

 

34. கவிதை பாருங்கள்(photo,poem)

பணம் பணம் அவனாட்டம்
பணம் தேட வேண்டும்.
பதவி பதவி நாற்காலி
கதவு தட்டியது திறக்க

like samme aakkam:-  https://kovaikkavi.wordpress.com/2011/01/12/200-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

***

https://kovaikkavi.wordpress.com/2015/12/14/417-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

                               

4. பயணம் (மலேசியா) 5.

 

4. பயணம் (மலேசியா) 5.

திருமணம் இனிமையாக கோலாலம்பூர் சித்தி விநாயகர் கோவில் கொண்டாட்ட மண்டபத்தில் நடந்தது. கீழ் பகுதியில் இரவு உணவு மண்டபமாக ஒழுங்கு செய்திருந்தனர்.

புதுத் தம்பதிகள் போர்ணியோவில் மலேசியா ஆட்சிப் பகுதியான சரவக்கிற்கு (Sarawak )  சென்றனர். இது சாந்தியின் உத்தியோகப் பகுதியின் பரிசாக 3-4 நாள் பயணமாக இருந்தது.

நாமும் மகளவையுமாக அடுத்த நாள் ஒரு வாடகைக் கார் பிடித்து இடங்கள் பார்க்கப் புறப்பட்டோம். முதலில் புட்ற யெயா (Putra Jeya ) என்று கூறும் திட்டமிட்டுச் செய்த புதிய மலேசிய நிர்வாக நகரம் (administrative capital of Malaysia) சென்றோம். இங்கு நாம் ஒரு மணித்தியாலம் செலவழிக்கலாம் என்றார் சாரதி. (ஒரு மணி நேரம் போதாது)

கோலாலம்பூரின் மேலதிக சன நெருக்கம், அடைசல், தேக்கம் என்ற காரணங்களால் நிர்வாக நகரம் இங்கு மாற்றப்பட்டது. தேசிய தலை நகரமாக கோலாலம்பூரும், வியாபார, அரச நிர்வாகம் இங்குமாக உள்ளது.

இது ஆதியில் 1918ல் பிறங் பிசார் (Prang Besar  ) என்று பிரிட்டிசாரினால் திறக்கப்பட்ட இடமாம்.
97.4 விகித இஸ்லாமியரும், 1.0விகித இந்துக்களும், 0.9 விகித கிறிஸ்தவரும், 0.4 விகித புத்த மதத்தினரும், இன்னும் பலரும் வாழ்கின்றனராம் புற்ர யெயாவில்.
(3.5கி.மீட்டர்) குறுக்கு வெட்டு 2.7 மைல்களாகுமாம் இதன் இடப்பரப்பு.

சுமார் 9 பாலங்கள் இங்கு உள்ளதாம்.

இது 1990ல் தொடங்கிய வேலைத் திட்டம். 1999ல் கோலாலம்பூரிலிருந்து உத்தியோக பூர்வமாக இங்கு மாறினார்கள். கோலாலம்பூரிலிருந்து 25 கி.மீட்டர் தெற்காக இந்த நகர் உள்ளது.

துங்கு அப்துல் ரகுமான் புட்ற்ரா மலேசிய முதல் பிரதம மந்திரியின் பெயராம். புற்ரா(Putra ) என்றால் இராசகுமாரன். யெயா (success or Victory  )என்றால் வெற்றியாளன்-வெற்றி.

புற்ரயெயா கோலாலம்பூருக்கும் தேசிய விமான நிலையத்திற்கும் ( KLLA  ) நடுவில் உள்ளது.
மிகப் பெரிய உல்லாசப் பயண நகரமாகவும் நாட்டின் நிர்வாக நகரமாகவும், நாட்டின் அடையாளமாகவும் உள்ளது.
சைபர் யெயா குளம் ( Ciber Jeya lake ) சுற்றி வர உள்ளது.

பிரதம மந்திரியின் இருப்பிடம் பெர்டனா புற்ரா (Perdana Putra  ) என்றும்

Perdana Putra. (our photo)

– மகாநாடுகள் நடத்தும் கட்டிடத்தின்(convention center) கூரை வித்தியாசமானது. ( cowboy hat ) கூரை யாக உள்ளது. மிக அழகு!

convention center.

படத்தில் தெரியும் தெருவூடாக சென்று இடது புறமாகத் திரும்பிச் சென்றோம் (வாகனத்தில்). பின் டென்மார்க் வந்து வாசித்து அறிந்தேன். (இதன் கூகிள் படம் தான் நீங்கள் பார்ப்பது.)

இங்கு அரசாங்க நிர்வாகக் கட்டிடங்கள் அனைத்தும் மிக நவீனமாகக் கட்டப்பட்டு ஆடம்பரமாகவும் தோற்றம் தருகிறது. உள்ளே போனதும் பெரிய சதுக்கம் உள்ளது. அதுவே மிகக் கவர்ச்சியாக உள்ளது. வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்தோம். வலது புறமாக இஸ்லாம் மதக் கோவில் (மொஸ்க்) ரோசா நிற கிரனைட் கல்லிலே கட்டப்பட்டு மிக அழகான தோற்றமாக உள்ளது.

My husband taking photo.

google photo.

இதன் ஸ்தூபி 116 மீட்டர் உயரமாக, 36 மீட்டர் சதுர அடியான அகலமாகக் கட்டப்பட்டது.15 ஆயிரம் மக்கள் கூடித் தொழ முடிந்த இடமாம். பக்தாத்திலிருந்து கட்டிடக் கலைஞர்கள் வந்து கட்டப்பட்டதாம். இந்தப் பள்ளிவாசல் அடித்தளச் சுவர்மொறக்கோ காசபலன்ங்கா(casabalanca) மாதிரியில் அமைந்ததாம். இதன் உள்ளே செல்ல அவர்களைப் போல உடையணிந்தால் தான் செல்ல முடியுமாம். செல்ல அனுமதி கிடைக்குமாம்.

நாம் வெளியே நின்று பார்த்து, புகைப்படங்கள் எடுத்தோம்.

our photo.

பள்ளி வாசல் மிக அமைதி, அழகோ அழகு, ஆடம்பரமாக இருந்தது.

இனி அங்கம் 6ல் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

3-8-2012

                                      
 

Previous Older Entries