7.
வளவு, நிலம் என்று அன்று வாழ்ந்த வாழ்வு இன்று எப்படியெல்லாம் மாறிவிட்டது. தாய் நிலத்தில் வாழ்ந்த வாழ்வைக் கனவிலே தான் காண முடிகிறது. (போகலாமே, பார்க்கலாமே என்கிறீர்களா!)
அங்கு வாழ்நிலையே மாறிவிட்டது.
கணனியில் பல படங்களைப் பார்க்கும் போது நினைவு பொங்கியெழுகிறது. ஏக்கம் பெருகுகிறது.
சமீபத்தில் இலுப்பம் பூவைப்பார்த்தேன். எத்தனை நினைவுகள்!….
நான் வாழ்ந்த வீட்டின் முன்புறத்தில் பக்கமாக பெரிய வளவு. அதில் பெரிய இலுப்பை மரங்கள் 2ம், சிறியதாக வேறும் இருந்தது.
இதில் பூக்கள் பூத்து விழும் போது, நிலத்தில் முத்து சிதறியதான அழகு.
கொட்டிக் கிடக்கும் அதனழகைப் பூரணமாக ரசிப்பதற்காகவே தம்பி தங்கைகளுடன் சேர்ந்து மரத்தின் கீழே சருகுகளைக் கூட்டி, கற்களைப் பொறுக்கி, பெரிய புற்களை வெட்டி, அழகாக்கி மாலையில் எதிரே அமர்ந்து ரசிப்போம். அதிகாலையிலும் பார்க்கும் போது மனமகிழ்வாக இருக்கும். நாமாக முன்னெடுக்கும் இந்த வேலைகளிற்கு அப்பா மறைமுகமாக ஆதரவு தருவார்.
உரித்துச் செதுக்கிய குட்டிக்குட்டித் (மினி மினித்) தேங்காய் – முடியோடு இருப்பது போன்ற தோற்றம் கொண்டது இலுப்பைப் பூ.
இது மட்டுமா! இன்னம் பல….
இரவில் இலுப்பைப் பழம் பழுக்கும் காலங்களில்
வெளவால்களின் கூச்சல் நிறையக் கேட்கும். தெரிந்த. சொந்தக் காரர் வெளவால் இறைச்சிக்காக இதை இரவில் சுடுவார்கள். பின்பு காலையில் நாங்கள் கீழே கிடக்கும் வெளவாலைப் பார்த்து ஆச்சரியப் படுவோம். யாரோ சுட்டிருப்பார்கள் என்று ஊகித்து இன்னார் இன்னார் என எங்களுக்குள் பேசுவோம். பின்பு நேரம் சிறிது செல்ல ”அண்ணை நாங்கள் தான் சுட்டோம் ” என்று கேட்டு எடுத்துச் செல்வார்கள்.
இது தவிர வெளவால்களால் தானென்று நினைக்கிறேன் ஓக்கிட் பூக்கன்றுகள் இலுப்பை மரத்தில் ஒட்டி வளரும்.
முன் வீட்டு டாக்டர் அருட்பிரகாசத்தின் சொந்தக்காரர்கள் வந்து எம்மிடம் கேட்டு கொக்கைத் தடியால் பிடுங்கிச் செல்வார்கள்.
(வெளவால் )
அவர்களிற்கு ஓம் சொல்லிப் பிடுங்கிச் செல்வது மன மகிழ்வாக இருக்கும். அடுத்து
அப்பா மண்வெட்டியை எடுத்துக் கொண்டு ”..பேபி (baby – my village name)வருகிறாயா கொச்சாட்டிக்கு? (பனை வளவிற்கு)” என்று கூப்பிட்டதும், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பேன். ( எனக்கு 8 வயதிற்குள் தானிருக்கும்.)
”…ஏனப்பா?…” என்று கேட்டபடி போவேன்.
”…வாவேன்…” என்றபடி கூட்டிப் போவார்..
அங்கு போனதும் என்னை மறந்து புல்லுப் பூக்களை நான் பிடுங்கிச் சேகரிப்பேன். கரடு முரடற்ற, வழவழப்பான கற்களைச் சேர்த்துப் பொறுக்குவேன். ( அவை கொக்கான் வெட்டவும், வேறு விளையாட்டிற்கும் உதவும்).
இப்படி என்னை மறந்து நான் உலாவ மறு பக்கம் அப்பா இரட்டைக் கட்டில் போட்டது போல ஈரமண்ணை சேர்த்து அணைத்து உயரமான பாத்தி ஒன்று செய்திட்டார்.
எப்படி இப்படி அப்பாவால் முடிகிறது! என என்னுள் நான் ஆச்சரியப்பட்டேன்.
அப்பா மெலிந்த தேக வாகு கொண்டவர்.
சில வேளைகளில் தான் அப்பா இப்படிச் செய்வார்.
மற்றும் வேளைகளில் சின்னப் பொடி வந்து கூலிக்குச் செய்து தரும். அப்போதும் சின்னப் பொடிக்கு தேனீர் கொடுக்க என்று நானும் வீட்டுப் பெரியவர்களுடன் கூடச் சென்று செய்யும் வேலைகளைப் பார்ப்பதுண்டு.
மிகுதியை மறு அங்கத்தில் பார்ப்போம்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-10-2012.
0.000000
0.000000