Goal of 750 Posts Completed. Congratulations! —Wordpress.com
4. பயணம் மலேசியா – 4
எமது பயணத் திகதிகளை இங்கு நான் குறிப்பிடவில்லை மகனின் திருமணத்திற்கு 5 நாட்களின் முன்னர் பரிசம் போட்டனர்.
பரிசம் என்றாலே என்னவென்று எமக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்தில் அப்படி நாம் செய்வதில்லை.
எல்லாவற்றையும் எமக்காகவும் செய்யுங்கள் நாம் வருகிறோம் என்றே நேரத்துடன் அங்கு சென்றோம்.
சுமார் 40, 50 மக்கள் சாந்தியின் உறவினர்கள் கூடி பரிசம் போடப்பட்டது.
சினிமாவில் வருவது போல ஆனால் கோயில் குருக்கள் (ஐயர்) வந்து இன்னாருக்கு இன்னாரை மணமுடித்து வைக்கிறோம் என்று கூறி, பெண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றி, சேலை மாலை என்று தட்டுகள் மாற்றி,
(கிட்டத்தட்ட தெத்தம் பண்ணுவது போலக் கொஞ்சம்) அவர்கள் பெண்ணை எமக்குத் தருவது போலவும், பின்னர் சாந்தி சேலை மாற்றி வந்து வீட்டிற்கு விளக்கேற்றினார்.
ஐயரிடம் கேட்டேன் இது ஏன் செய்வதென்று. வீட்டிற்கு விளக்கேற்றுவதே இதன் முக்கிய கருத்து என்றார்.
இரவுணவு, படங்கள், வீடியோவென கிட்டத்தட்ட ஒரு குட்டிக் கல்யாண வீடாகவே இருந்தது – நடந்தது. (என்ன! மாப்பிள்ளைப் பகுதியில் நாமிருவருமே. வேலை, லீவு என்பதால் மற்றவர்கள் இனித்தான் வருவார்கள்.)
இரவு பரிசம் முடிய கூடி இருந்து கதைத்து, வந்த விருந்தினர்கள் யாவரும் செல்ல இரவு ஒரு மணி போல எம் அறைக்குச் சென்று, நல்ல நித்திரை கொண்டோம்.
இது எமது அறை யன்னலூடான காட்சி. கண்ணுக்கு அழகாக உள்ளது. (மழை பெய்ய புழுத்த நாற்றம், சாக்கடை நாற்றம்)
அடுத்த நாள் – காலை ஒன்பதரை, பத்து மணி போல சாந்தியும், திலீபனும் சாந்தியின் நீல நிறக் காரில் வந்து எங்களைத் தங்கள் வீட்டுக்குக் கிட்ட உள்ள டே ரு டே (day to day ) எனும் உணவகத்திற்கு காலையுணவிற்காக அழைத்துச் சென்றனர்.
இங்கு தான் பசும்பால் கலந்த தேனீர் கிடைக்கும். சாந்தியின் அப்பா, அம்மா சாந்தியின் தங்கை பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக உணவுண்டோம்.
அப்பம் காலையுணவாக எடுத்தோம். நாம் தேங்காய்ப் பாலை அப்பத்தின் மேல் விட்டு சூட்டில் உறைய வைத்து (சுட்டு) உண்போம். இவர்கள் தேங்காய்ப் பாலை வேறாக, குட்டித் டம்ளரில் வைத்தனர். ஆனால் சும்மாவே அப்பம் சாப்பிட மிகச் சுவையாக இருந்தது.
தேனீரும் ம்..ம்….மிக மிக சுவை. ( ஐ லவ் பால் தேனீர் – என் உயிர்)
சாந்தியின் தங்கை மகள் அப்பத்தை தேங்காய்ப் பாலில் குளிப்பாட்டிச் சாப்பிட்டார்.
என் கணவர் அப்பத்திற்குக் கட்டைச் சம்பல் கேட்டார். (மிளகாய் அரைத்து, உப்பு, புளி வெங்காயம், மாசி கலப்பது). உடனே முதலாளி போய்க் கொண்டு வந்தார்.
இதற்கிடையில் நாம் வெளி நாட்டுக்காரர் என்று ஓரே கலகலப்பாக்கி விட்டனர். முதலாளி தன் மனைவியைக் கூட்டி வந்து அறிமுகம் செய்து வைத்தார்.
பின்பு சாந்தி வீடு அப்படி இப்படி என்று நாட்கள் செல்ல மகளும் துணைவரும் இலண்டனில் இருந்து வந்தனர். எமக்கு அடுத்தடுத்த அறையையே அவர்களிற்கும்
பதிவு பண்ணியிருந்தனர். திருமணம் முடியும் வரை வெளியே உலாத்துவதைத் தவிர்த்திருந்தோம்.
மகளுடன் மசாஜ், முக அழகு, காலழகு செய்ய என்று இடம் தேடித் திரிய எம்மோடு எமது துணைகளும் வந்து அந்தப் பெரிய மாலில் செய்தோம், சுற்றினோம்.
அங்கேயே உணவு என்று நன்றாகவே பொழுதைக் கழி(ளி)க்கலாம்.
அவ்வளவு அழகு, நவீனம்.
மிகுதியை அங்கம் 4ல் பார்ப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-7-2012.
0.000000
0.000000