ஏணிப் படியான அன்பு.
19-4-2008.
மாணிக்கம் முதலாம் நவமணிகளும், ஆணிப்பொன்னும் கூடக் காணிக்கையாகாது பெற்றவரன்புக்கு. ஏணிப் படியாக இவ்வன்பை எண்ணுவோர், நாணிடத் தேவையில்லை. மானிலத்தில் நாம் உறவாடும் இவர்கள் உயிர்த் தெய்வங்கள்.
” எம்மை உதாசீனம் செய்வோரைப் பொருட் படுத்தாதே. அம்மணமாக அல்ல, நீ ஆயிரம் திறமைகளுடன் இம்மியளவும் தயங்காது தொடர்ந்து முன்னேறு.” அம்மா, அப்பாவின் புத்திமதி இது. இம்மட்டும் அப்படியே தொடர்கிறேன். கம்பீரம் எம்மை வந்தடையப் பெற்றவர் ஆசி துணையே. எம்மைப் பெற்றவரை மதித்தால் உரிய சம்பளம் செம்மையாய் வந்து சேரும்.
இயற்கை தந்த உறவு பெற்றோர். செயற்கையில் உறவாகப் பலர் தொற்றுவார். மயக்கமும் தந்து மாயமும் செய்வார். வியக்கும் உறவான பெற்றவர் பாசமே, தயக்கம் காட்டாது தனியே துடிப்பது. தவறிடாது அவரைப் போற்றி நல்வாழ்வு வாழ்வோம்.
விழியோரம் அன்பு கசிய, களிகொள்ளும் பார்வையாய், ஒளிச்சுடராக அன்பு காட்டி வழி காட்டிய பெற்றோரே, வழி வழியாக நீங்கள் தந்த பண்புகளை எழிலாக எடுத்து, ஆயிரம் அனுபவங்கள் பெற்றோம், பெறுவோம். அவரணைப்பில் ஆதரவு துளியும் குறையாது, அவரன்பை ஆராதிக்காத உள்ளங்கள் அவர்களுக்கு அன்பை அள்ளிக் கொடுங்கள். மறுபடி வராது இந்த ஜென்மம்.
கருணை மனம், தென்றல் வீசும் வாசல், அருமையாக அன்போடு பிணைத்து, திருவாக பெற்றொர் ஊட்டிய விடயங்களை நாம் பெரிதாக எடுப்பதில்லை. அமுத வாசலிது. கருமை குணங்களை விலக்கி, அனைவரும் கருணாமூத்தியாய் எம் உள்ளத்தை வளர்ப்போம்.
26-4.2008.
சிறையல்ல உலகு. சிலவற்றைச் செய்யப் பிறந்தாய் என்று நற் பண்பெனும் மறை ஓதி உருவாக்கிய போசகர்கள், இறைவன் தந்த பொக்கிசம் பெற்றவர். முறையாக இதை உணர்ந்து, குறையின்றி அமைக்கும் வாழ்வே வரம்.
27-4-2008.
அழுதவர் அழுகையை நிறுத்தும் , இழுக்கற்ற பாசம் பொழியும், தொழுகைக்குரிய பெற்றவர் விரும்புவது, முழுவதுமான எமது பதில் அன்பைத்தான். மதிப்புடைய பதில் ஆதரவைத்தான். மிதிக்காத அந்த அன்பால் தானே நாம் எழுந்தோம்.
நிலா போன்ற அன்பெனும் ஒளி, உலாவியது பிள்ளைகளுக்காய் பேதமின்றி. பலாச்சுளை போல் இனிக்குமதை, சகோதரர்கள் நாம் குலாவி மகிழ்ந்து உயர்ந்தோம். குறையின்றி அவர்களை இறுதி வரை காப்போம்(காத்தோம்). எம் வாழ்வில் அவர்கள் தானே வானம்.
4-5-2008.
உறவே உலகின் இணைப்புச் சங்கிலி. குறையே இன்றி அதைப் பேணுதல் நிறைவே. உன்னத பெற்றவர் அன்பு வாழ்வில் கறை துடைத்து, உயிரின் கலங்கரை விளக்காகிறது. அறவே விலக்காது பெற்றவரை அணைப்போம். நறவான அவர்கள் உறவு உலகில் உயர்வே! உயர்வே!
17-5-2008.
சொந்தம் கொள்ளும் பெற்றவா, உறவின் சந்தம், அன்பு ஆதரவு எனும் பந்தம், பகிர்தலின் உருவம் தான். அந்தம் வரை தொடர்தலில் தான் உண்டு சொர்க்கம். முந்துவோம். இதைப் பிந்தாமற் பகிர்வோம். வந்திடும் வாழ்வில் நிதமும் சொர்க்கம்.
வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
0.000000
0.000000