அங்கிங்கெனாதபடி…..
(ஒரு தடவை யெர்மன் ” பூவரசு”..இதழ் தந்த தலைப்பிற்கு எழுதிய கவிதை – 2004ல்)
அங்கிங்கெனாதபடி அண்ட சராசரமும்
தங்கித் துலங்கிடும் தங்க மயிலோனே முருகா!
பொங்கி விரவும் துணிவும்
மங்காது விரியும் புகழும்
தங்கிடும் பொருளும் உயர்வும்
கங்கையாய் என்னொடு கலக்க
மங்களமாய் அருள்வாய் இறைவா!
எங்கள் பரம்பொருளே முருகா! (அங்கிங்கெனாதபடி)
பயமும் கவலையும் என்னுள்
சுயம்பு ஆகாது விலகிட
வியனுறு நம்பிக்கை உயர்ந்திட
பயனுறு நலம் பெருகிட
நயமுறு அறிவு வளர்ந்திட
நயம் தருவாய் முருகா! (அங்கிங்கெனாதபடி)
அன்பு, பண்பு உயர்ந்திட
இன்பம், திண்மை வளர்ந்திட
வன்மை வறுமை ஒழிந்திட
திருமிகு தாய்மண் இணைந்திட
திருப்தியாய் தமிழோடு வாழ்ந்திட
திருவருள் தருவாய் முருகா!. (அங்கிங்கெனாதபடி)
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-12-2004
(விரவும்- கல, பொருந்து. சுயம்பு – தானாக உண்டானது.
வியனுறு-சிறப்பு, வியப்புடை. திண்மை- வலிமை, உறுதி.)