கார்த்திகை விளக்கீடு.
கார்த்திகை விளக்கீடு என்றதும் நாம் வளர்ந்த காலத்து வீட்டு நினைவுகள் தான் வரும். வீட்டில் அம்மா கார்த்திகை விளக்கீடு நெருங்கும் போது சொல்லுவா அடுப்பெரிக்க
தென்னம் பாளைகளை எடுக்காதீர்கள் என்று. அவைகள் மழைக்கு நனையாதவாறு கொட்டிலின் ஓரத்தில் தொங்கும் அசைவுகளில் அடுக்கப்பட்டிருக்கும்.
கொட்டில் என்பது பல வகையில் இருக்கும். எங்களது கொட்டில் வீட்டிற்கு அருகில் நான்கு பெரிய கொன்கிரீட் தூணில், இரண்டு பெரிய அறைகள் அளவில் மிக உயரமாக அமைத்து,
தென்னங்கிடுகுகளால் வேயப்பட்டது. நான்கு பக்கமும் திறந்த வெளியாகவே இருக்கும். ஒரு மூலையில் ஆடு கட்டுவோம். நடுவில் மா இடிக்க, மா வறுக்க என்று பாவிப்போம். இதை கூலிக்கு ஆட்களும் வந்து செய்வர், நாங்களும் அவசர தேவைகளிற்கும் செய்வோம்.
இன்னொரு பக்கத்தில் ஒரு இரும்புக் கட்டில் இருக்கும். அப்பா பகல் சாப்பிட்டதும்
விசிறி எடுத்து விசிறியபடி அமர்ந்து வாசிப்பார். மெத்தையும் போட்டிருக்கும். அடிக்கடி கொட்டிலின் உள்ளேயே இது இடம் மாறும். அப்பா காற்று வாங்குவதற்காகத் தன் வசதிப்படி மாற்றுவார். நாங்களும் படுத்து விளையாடுவோம்.
இந்த இரும்புக் கட்டில் மடக்கி மடிக்கக் கூடியது. இங்குள்ள சம்மர் கட்டில் போன்றது.
விளக்கீடு நாளில் பகல் நேரத்தில் தென்னம் பாளைகளை இரண்டு அங்குல அளவில் கீறிக் கிழித்து அளவாக வெட்டி, ஒரு நுனியில் பழைய துணிகனைச் சுற்றிப் பந்தமாகக் கட்டி வைப்போம். எண்ணை ஊற்றிய சட்டியுள் இவை ஊறியபடி இருக்கும்.
மாலை இருட்டாக இவைகளைப்பற்ற வைத்து வீட்டைச் சுற்றிய வளவில் எல்லா இடமும் வைப்போம். வீட்டுப் படலை முன்பு பெரிய வாழைமரக் குற்றி ஒன்று கொண்டு வந்து நிறுத்தி,
இதில் சிரட்டை மேலே தெரிகிறது. நாங்கள் அங்கு ஒரு குழி செய்து அதனுள் சிரட்டை வைத்து என்ணெய் துணிகள் வைத்து எரிப்போம்.
அது பெரிதாக எரியும்.
வீடடில் உள்ள பாவிக்காத அத்தனை விளக்குகளும் புளி போட்டுத் துலக்கமாக மினுக்கிப் பற்ற வைக்கப்படும்.
ஓடி ஓடி அப்பாவுடன் வளவெல்லாம் மழை ஈரத்தில் பந்தம் நடுவது மிக ஆர்வமாக இருக்கும். பாளையின் கூர்ப் பகுதி சுலபமாக மண்ணுள்ளே இறங்கும்.
எமது வீட்டு வேலை முடிய ஆச்சி வீடு சென்று பார்ப்போம். வீட்டுப் படலையில் நின்று, அந்து ஒழுங்கையில் மற்றவர்கள் வீட்டுப் பந்தங்களையும் பார்ப்போம்.
பின்னர் நாம் வளர ஒரு தடவை மாமா வீட்டில் பெரிய பெட்டி நிறைய கொழும்பிலிருந்து சிட்டிகள் வரவழைத்து
வீட்டின் மேல் சுற்றிவர சிட்டி வைக்க மாமா, மாமி ஆயத்தப் படுத்தியதும் நினைவு வருகிறது.
இப்படியாக திருக்கார்த்திகை என்றால் எனது தொலைந்து போன நினைவுகள்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-11-2013.