தொட்டிற் பாடல்
சாய்ந்தாடய்யா சாய்ந்தாடு!
சாதனை வீரனாய்ச் சாய்ந்தாடு!
சாதுரிய சீலனே சாய்ந்தாடு!
சாந்த ரூபனே சாய்ந்தாடு!
கட்டித் தங்கமே சாய்ந்தாடு!
பெட்டி வைரமே சாய்ந்தாடு!
கற்கண்டுக் கட்டியே சாய்ந்தாடு!
கருணை ஒளியே சாய்ந்தாடு!
தாமரை மொட்டே சாய்ந்தாடு!
தாவிக் குதிக்கச் சாய்ந்தாடு!
சின்னப் புறாவே சாய்ந்தாடு!
சிணுங்காது சிரித்துச் சாய்ந்தாடு!
—— வேதா……..
வண்ணங்களின் கீழ் வருகிறது இப் பாடல். தமிழில் 1000 வண்ணங்கள் உள்ளதாம். இப் பால்களின் ஓசை நயம் குழந்தைகள் செவிப் புலன் சீரடைய வழி வகுக்கும். இது பிள்ளைகளின் பிற்கால இசை வளர்ச்சியை, பாடல் (செய்யுள்) இயற்றலையும் வெகு இலகுவாகக் கற்க உதவிடும்.
மிகவும் முயற்சியுறாது கேட்டுணரும் இவை பிற்காலத் தமிழ் இசை, இலக்கிய வளத்திற்குப் பெரிதும் உதவியாற்றும்.
3 முதல் ஏழு வயதுப் பிள்ளைகளிற்கு இது நல்ல கருத்துணர்வைத் தட்டியெழுப்பும். சிந்திக்கும் திறனை உருவாக்கும்.
இவர்கள் இந்த இசையின் கவர்ச்சியால் சொல்லின் கருத்தறிவார்கள். சொற் கருத்தால் பொருளின் அறிவு பெறுவார்கள். அறிந்த பொருளுடன் அறியாத பொருள் பற்றியும் ஆராய முயற்சிப்பார்கள்.
வியப்பு, நேசம், பாசமிகு அன்புப் பாடல்களை இவர்கள் மிக விரும்புவார்கள்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் தன் பாட்டி இலக்குமிப்பிள்ளை ஒரு பிள்ளையைத் தூக்கி வைத்துப் பாடிய பாடல் என்று
”…சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு…”
எனும் பாடலை எழுதியுள்ளார். இவை மழலைப் பருவ இலக்கியங்கள் என்கிறார்.
பாடசாலைப் பருவ இலக்கியத் தமிழ் கற்க ‘ அழகியலுணர்வு ‘ பெற இப்பாடல்கள் அடிப்படையைத் தருவது என்கிறார். ஓசை நயம் கலந்த இந்தப் பாடல்களை இடைவெளியின்றித் திரும்பத் திரும்பக் குழந்தைகள் கேட்கலாம். நாமும் பாடலாம். அவர்கள் அறியாது இவைகளை அறிவார்கள்.
மனம் முயற்சியின்றிப் படித்தலெனும் இத்திறனை அகநூலார் ”அசாக்கிரப் படிப்பு” என்பார் என்கிறார் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.
”குழவிப் பருவ இலக்கியப் பாடல்கள் எல்லாம் அசாக்கிரமயுருப்படுவனவாதலின் அவை செவ்விய ஓசை வளமுடையனவாக இருத்தல் வேண்டும்” என்கிறார் சோமசுந்தரப் புலவர்.
1955ம் ஆண்டுப் பதிப்பு நூலில் 35 ஆண்டுகளிற்கு முன்னர் இத்தகைய பாடல்கள் யாழ்ப்பாணத்தில் சொல்வழக்கிலிருந்தது என்கிறார்.
இதை நாம் இன்று கூறுவதானால் 92 வருடங்களிற்கு முன் இவை யாழ்ப்பாணத்தில் சொல் வழக்கிலிருந்தது என்று கூறமுடியும்.
பிறநாட்டு மொழிகள், நாகரீகம் வந்து புக எமது பழைமைப் பாடல்கள் அழிந்துபட்டன. ஆயினும் எனது பாட்டிமார் இதைப் பாட நான் கேட்டுள்ளேன். இதை எம் பேரனுக்காக நான் எழுதினேன். அவர் சிறிது வளர, பாடிக் காட்டுவேன்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2012.
இதோடு சேரும் ஒரு இடுகை. வாசித்துப் பாருங்களேன்! மிக்க நன்றி.
https://kovaikkavi.wordpress.com/2010/12/12/179-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
0.000000
0.000000