30. பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.

 

பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.

 

எப்படி வெளியே பிள்ளைகள் காயப்படுகிறார்கள்!

பாலர் பாடசாலையில்  வெளியே உலா செல்லும் நாட்களில் தெருக்களைக் கடக்கும் போது, சன நெரிசலிற் புகும் போது, குழுநிலையில் சிறுவர்கள் ஒருவருடன் ஒருவர் கைகளைக் கோர்த்து, சோடி சோடியாக இடையில் பெரியவர்களுடனும் நடக்க வேண்டும்.

எல்லோரும் சோடி சோடியாகக் கை பிடித்து நிற்க இறுதியாக 3 வயதுடைய ஒரு ஆசியப் பெண் குழந்தையும், ஒரு டெனிஸ் ஆண் குழந்தையும் எஞ்சி நின்றனர்.
”கையைக் கோர்த்திடு” என்றேன்…பெண் குழந்தையிடம்.
மாட்டேன் என்று மறுத்தாள்.
” இப்படி உலாப் போகும் போது சிறு பிள்ளைகள் கை பிடிக்க வேணும் என்ற வழக்கத்தை மறந்து விட்டாயா?..” என்றேன்.
”நான் ஆண் பிள்ளைகள் கையைப் பிடிக்க மாட்டேன்!”…என்று அடம் பிடித்தாள்.
” ஏன்” என்ற போதும் (இக் கேள்வியை மிக மன நோவுடனேயே நான் கேட்டேன்)
”மாட்டேன்…மாட்டேன்”… என்றாள்.
பின்பு நானும் சேர்ந்து அவளோடு கை பிடித்து நடந்தோம்.
எமது வற்புறுத்தலால் அவளது கண்கள் கலங்கி விட்டன. அழுதாள். அவளது நிலைமை எனக்கு விளங்கியது.

பின்னொரு தடவை – வேறொரு நாள் சைக்கிளோடி விளையாடிய போது, ஒரு ஆபிரிக்க ஆண்பிள்ளை 4 வயதுடையவன் எனக்கு பெண் பிள்ளையோடு சைக்கிளில் இரட்டையாக, சமமாக உட்கார முடியாது என்றான்.
”ஏன்” என்றேன்.

” ஆண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்., பெண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்.” என்று அடித்துக் கூறினான்.
”..யார் கூறியது?…” என்றேன்.
”…அம்மா..கூறினார் ” என்றான். (நானும் ஒரு ஆசியப் பெண் ஆனாலும், ஐரோப்பியக் கலாச்சாரப் பாலர் பாடசாலை ஆசிரியையாகப் பயிற்றப் பட்டு ஐரோப்பியரோடு வேலை செய்தவள். புலம் பெயர்ந்த பிள்ளைகள் நிலை இது.)

இது தான் கலாச்சார இடிபாடு.

வீட்டில் கூறும் பிற நாட்டுக் கலாச்சாரப் புத்திமதிகள் பிள்ளைகளிடம் வேலை செய்கிறது. ஆனால் அது இங்கு (ஐரோப்பியக் கலாச்சாரத்தில்) வெளியில் எடுபடாது.

ஆணும் பெண்ணும் கலந்து பழகி விளையாட வேண்டும். அவர்கள் கலந்து பழகி விளையாட நாமோ தடை செய்வதில்லை, ஊக்குவிக்கிறோம். இது எமது தொழில்.

புலம் பெயர்ந்த பிள்ளைகளிற்கு கூறும் புத்திமதியின் விதம் பிழையானது என்பது எனது கருத்து ஆணும் பெண்ணும் சேர்வதே கூடாது என்று கூறி  சேரும் ஆவலைப் பெற்றோர் மறைமுகமாகத் தூண்டுகின்றனரோ என்று தோன்றுகிறது.
நன்கு விளக்கமாக இது கூறப் படல் வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பிள்ளைகளிற்கு உங்கள் முழு அன்பை, ஆதரவைக் கொடுப்பதே.

எப்படி வெளியே அடிபடுகிறார்கள் பார்த்தீர்களா?

கிளப், பாடசாலை, ஓய்வு நேரப் பாடசாலைகளில் இதை விட நிலைமைகள் வேறு. டிஸ்கோ, சேர்ந்து பயணங்கள் போய் இரவு தங்குதல் என்று பல. இதில் பயணத்திற்குக் கொண்டு போகும் பொருட்களின் நினைவுப் பட்டியலில் கருத்தடை உறையும் ஒரு பொருளாகப் பாடசாலையால் எழுதப் பட்டிருக்கும்!

இவைகளைப் புரிந்து கொண்டு அணையுங்கள்! இல்லாவிடில் உடைந்து விடுவார்கள் பார்த்தீர்களா!

எவ்விடயமானாலும் பக்குவமாகக் கூறிட வேண்டும்!

கவனியுங்கள்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2004.

(இது இலண்டன் தமிழ் வானொலி ” ஓடி விளையாடு பாப்பா”  நிகழ்வில் 5-9-2004 ல் எழுதி வாசிக்கப்பட்டது.)

(ஒரு மழை நாளில் சைக்கிளோடும் விளையாட்டு…)

 

                                    

32. கவிதை பாருங்கள்

 

இடம் கண்டு நீரோட
தடம் கண்டு வேரோடு!
புடம் போட நீயாடு!

அடம் கொண்டு வாடாது
படம் கண்டு பாராட்ட
திடம் கொண்டு போராடு!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
26-6-2012.

 

                                    

 

                                      

 

31. கவிதை பாருங்கள்.

 

ஆசை, பேராசை தப்போசை.
மாசு கிளப்பும் நப்பாசை.

ஆசை, ஆவல் பொறுமையின்மை
ஆத்திரம் கிளப்பும் கந்தகம்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-6-2012.

 

                                 

241. புத்தம் புது உலகம் வேண்டும்.

 

புத்தம் புது உலகம் வேண்டும்.

 

 

புத்தம் புது உலகம் வேண்டும்.
நித்தம் மகிழ் வாழ்வு வேண்டும்
சித்தம் குளம்பிய பல மனிதருக்கு
உத்தம வாழ்வு சுகப்பட வேண்டும்.

 

பகைவன் நண்பனின்றிப் பகலவன் ஒளிர்வதாய்,
பாகுபாடு இன்றிப் பால்நிலா காய்வதாய்,
பிறர் நலம் கருதும் சிந்தனை வேண்டும்.
சுயநல நோக்குகள் மறைய வேண்டும்.

 

பங்கமுடை பாழான மனித நோக்கு
சிங்கம் சிறு மிருக நோக்கு
எங்கும் இல்லா மனிதம் வேண்டும்.
ஏமாற்றுவோரும், ஏமாறுவோரும் இல்லாதொழிய வேண்டும்.

 

பகட்டு கௌரவம், போலி வாழ்வை
திகட்டாது அணைக்கும் பொய்யான சென்மங்கள்
திருவுளம் மாறப் பாதைகள் பல
திறந்திட வழியொன்று வேண்டும்.

 

பணத் தீயில் குளிர் காயும்
மனம் மதிக்கா மனித உயிரைக்
கனம் பண்ணா தொதுக்க வேண்டும்.
பிணமாகப் பிறர் மதிக்க வேண்டும்.

 

தேனிதழ்ச் செவ்வாய் மங்கையரை
திருமணம் தென்றலாய்த் தழுவிட வேண்டும்.
திருமணம் என்பது தீப்பந்தமானால்
ஒருமனதாக நீர் விட வேண்டும்.

 

மறுமண சுகந்தம் நுகரா மாதரும்
மறுபடி யொருமுறை நினைத்திட வேண்டும்.
மனமகிழ் வாழ்வை மனம் மாறி உலகில்
மறுக்காதேற்கும் புத்துலகாக வேண்டும்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-2-2002

(12-2-2002ல: ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் கவிதை பாடுவோம் நிகழ்வில் ஒலி பரப்பானது.)

 

                                 

 

 

 

 

29. உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது!

உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது!

 

படுக்கையில் நித்திரை கொள்வதும், அழுவதும், பால் குடிப்பதுமாக இருந்த பிறந்த குழந்தை, தனது தொடர்புக் கணையாக அழுகையைப் பாவித்த குழந்தை, முதன் முதலில் தனது முகத்துத் தசை நார்கள் விரிந்து,

 

சிரிக்க ஆரம்பிக்கிறது.

இரண்டாவது தொடர் கணையாகச் சிரிப்பது, புன்முறுவல் பூப்பது அதன் வளர்ச்சியின் ஒரு முன்னேற்றம்.

நீங்களும் கண் தொடர்பை நன்கு பேணிக் கொண்டு குழந்தையுடன் பேசுங்கள். அம்மா அப்பாவாகிய நீங்கள் சிரிக்கச் சிரிக்கக் குழந்தையும் சிரித்துத் தன் திறனை வளர்க்கும்.

மிகச் சிறு குழச்தைக்கு இது பொருந்தும்.

” உம் ” என்று முகத்தைத் தூக்கி வைத்துத் திரிவது பிள்ளைகளைப் பாதிக்கும். சிரியுங்கள். புன்னகையுங்கள் இது வீணாகி விடாது.

பெற்றவரை மாதிரியாக வைத்தே பிள்ளைகள் வளருகிறார்கள். ஆகவே உங்கள் சிரிப்பு என்றுமே வீணாகாது.

சிரிப்பு முக்கியமானது. உங்கள் குழந்தைக்கு அந்தச் சிரிப்புக் கொடுக்கும் செய்தியாவது, நானும் நீயும் ஒன்று, எனக்கு நீ உனக்கு நானனெனும் செய்தியே, நாம் நெருக்கமானவர்கள் என்று கூறுகிறது.

அது போலவே தான் அழுகையும் அமைகிறது. மனிதர்களின் கவனிப்பை  அழுகையும் இழுக்கிறது.

அதுவே குழந்தைக்குத் தேவையானதுமாகிறது.

பல விடயங்களில் மனிதரைக் குரங்குடன் ஒப்பிடுவோம். ஆனால் இந்தச் சிரிப்பில் மட்டும் அது ஒத்து வருவதில்லை. பிறந்த குழந்தையும் சிரிக்கிறது.

அம்மா அப்பாவின் தொடர்பு நழுவுகிறதோ! அதைத் தெரிவிப்பதும் சிரிப்புத் தான்.
ஒரு மாய மந்திரக் கயிறாக மழலைச் சிரிப்பு எம்மை இழுக்கிறது.

எத்தனை கோடியையும் அச் சிரிப்பிற்கு ஈடாகக் கொடுக்கலாம். பிள்ளையை விட்டு விலக மனமின்றி அணைக்கிறோம்.
இந்த அணைப்பையே குழந்தை கேட்கிறது.

ஏன் சிறு குழந்தை சிரிக்கிறது என்றால் நீங்கள் என்னோடு அருகிலேயே இருங்கள் என்று மேல் மனுச் செய்கிறதாம்.

உங்கள் குழந்தையை விளங்கிக் கொள்கிறீர்களா!

சிரியுங்கள்! பல சிறப்பு உருவாகும்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-8-2004.

HERE also ABOUT LAGH:—-

5.   பா மாலிகை ( கதம்பம்)சிரியுங்கள்! 497.

 

                                     

 

240. காலம்.

 

காலம்.

 

சுற்றும் பூமி தன்னைச் சுற்றிட
ஓற்றை நாட் கணக்குக் கண்டார்.
சுற்றல் சூரியனையும் சேர்த்து என்றாகிட
முற்றுப் பெறுவது ஒரு வருடமென்றார்.
கற்ற உலகறிவாற் கணக்கிட்டாரன்று
நிற்காத காலப் புலர்வு மலர்ந்தது.

கலவன் ஒளி நிரந்தரக் கதிர்.
பாரிய பூமிச் சுற்றலால் இராப்பகல்.
மாரி, கோடை, இலையுதிர் வசந்தம்
பெயரானது அன்று பருவ காலங்களாய்.
இறந்த, நிகழ், எதிர் காலமாய்க்
காலக் கோலப் பாலம் கட்டினர்.

ழலை, இளமை, முதுமை யென்ற
மனித வாழ்வுப் பருவ காலங்கள்.
போர், புயல், அமைதிக் காலம்
தேர், திருவிழா, விரத காலம்
கோளாம் சனி, ராகு, கேதுவென
நாளும் சுளன்று மாறும் காலம்.

காலம் செய்வது கருத்தானவர் செய்யார்.
கால நேரக் கனிவிற்குக் காத்திருத்தல்
காலமறிந்த செயற்பாடு பொன்.
காலத்து மாற்றங்கள் தேவையின் அவசியம்.
இலக்கியம், சரித்திர விவரண எழுத்துகள்
துலக்கமாய் விளங்கும் காலப் பதிவாக.

லி காலம், களிப்புக் காலம்
ஆமாவாசை, பௌர்ணமி, ஆரம்பம், முடிவென
காலம் கணிக்கக் காரணங்கள் பல.
மூலமானது பிறப்பு, இறப்புக் கணிப்பு.
காலத்தே பயிர் செய்து பயனாக்கி
ஞாலத்தில் வாழ்வுக் காலத்தில் நீந்துவோம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-6-2012.

(19-6-2012ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் மாலை (19.00-20.00) கவிதை பாடும் நேரத்தில் இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.)

 

 

                                       

 

 

 

 

33. சொற்களிற்கு நோகுமோ!…

 

சொற்களிற்கு நோகுமோ!..

 

னாக்காணும் இரவிலே
நானா உன் கனவிலே!
ஏனோ பதில் தராமலே
வீணே மௌனம் அன்பே

நான் மட்டுமா நெஞ்சில்!
பொன் நிலா ஒளியில்
உன் பதில் வராமல்
தேன் பொழியுமா மனதில்!

து என்ன தேடலோ
புதுப் போதை நாடலோ!
பொதுக் காதல் ஆடலோ
மதுக் காதல் ஊடலோ!

ற்றெடுக்கும் காதல்
காற்றடைத்த பந்தாயென்னை
மாற்றுகிறது சுக சுகமாய்
ஏற்றுகிறது எங்கோ எங்கோ…

துளிர்க்கும் அன்பு நிலை
வெளிச்சக் காதல் நிலை.
கட்டிப் போடும் வலை
வெட்ட முடியாக் கலை.

யிர்ச் சக்தி தருவதால்
பெரும் சக்தி காதல்
அணுசக்தியாய்த் துளைத்தால்
என் சக்தி என்னாவதோ!

ற்களிலே பாதம் நோகும்
சொற்களிற்கு நோகுமென்றோ
நிற்கின்றாய் பதிலின்றி!
அற்புதக் காதல் மாயமிதோ!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-6-2010.

 

 

                                                   
 

 

20. வேதாவின் மொழிகள்.

20. வேதாவின் மொழிகள்.

 

என் திறமை, என் தனித்துவம், என் வழி சிறப்பானது. பிறரோடு என்னை ஒப்பிட்டு என்னை நானே இகழ்வதில்லை.

 

குணம் காண முடிந்தவைகளே பிரச்சனைகள். குழம்பித் திரட்டுவது, திணறுவது நாம் தான். அதாவது இடையில் நானெனும் அகம்பாவம், யார் முதலில் குனிவது என்று பலவற்றைப் போட்டுக் குழப்புவது நாமே தான்.

 

 சிடுசிடுக்கும் வாழ்விலும் புன்னகை செய்யும் வாழ்வு புதையலைத் தரும்.

 

 அன்பு, அமைதி, இன்பமாய் வாழும் வாழ்வினால் வாழ்விற்கு மரியாதை, மதிப்புக் கிடைக்கிறது.

 

 எதிர்பார்ப்பு நிறைறோவிடில், ஏமாற்றம் நிறைவதால் நேசிப்பவரையும் வெறுக்கும் நிலை வருமோ!

 

 26-9-2004
நாணயமாக வாழ்வதை விட, இன்று நாணய மதிப்பு வாழ்வில் நயமாக பலரின் மதிப்பில் உயர்ந்துள்ளது.

 

 ஆர்ப்பரித்துப் புரளும் அலை மீது,
ஊர் எதிர்த்துக் கல்லெறிந்தாலும்
நேர் நின்று தானாகப் புரண்டு
பார் மீது மோதும் தன்னம்பிக்கை அலையாக நில்!

 23-2-2004
முறையற்ற தொடர்பு கறை பட வைக்கும்.
முறைகேடு தொடர்வது நிறைவற்ற மனதின்
குறைவான நிலைப்பாடாகும்..

23-2-2004
ஆயுள் பரியந்தம் பரிவு, பாசம், நேசத்தைப் பரிவர்த்தனை செய்து பரிசோதித்தலை
பரிச்சயமாக்கி வாழ்தல் ஒரு பரிசுத்தமான பரிபக்குவ நிலையாகிறது.
இதில் பரிபூரணத்தால் பரிமளித்தலும், பரிதாபமோ, பரிகாச நிலை பெறுதலுமோ அவரவருக்கு அளந்த பரிமாணப்படி நடக்கிறது.

6-12-2003.
மனம் நிறைந்து நகைக்கும் போது உடலில் தினம் பல நரம்புகள் இயங்கி ஒளி தரும்.
நகைச்சுவை தங்க நகைச்சுவையிலும் மிகைச் சுவை.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                         
 

17. சிறிது நேரம் தூங்கிடு!

  

 

சிறிது நேரம் தூங்கிடு!

 

கண்மூடய்யா கண்மூடு! என்
கன்னற் தமிழே கண்மூடு!
கட்டிக் கரும்பே கண்மூடு!
களைத்து விட்டாய் கண்மூடு!                              (கண்மூடய்யா)

மித்திரர் தொல்லை, சத்துரு தொல்லை,
புத்திமானாக உன் நித்திரை தொலையும்!
சித்திரத் தேரே நித்திரை கொள்ளு!
சிறிது நேரம் சித்திரை கொள்ளு!                     (கண்மூடய்யா)

அன்னையாகுதல் ஒரு சிறு கடனல்ல
உன்னை மறந்து அமைதியாய்த் தூங்கு!
பின்னைக் கடன்கள் பெரிதாய்க் காத்திருக்கு
உன்னைப் பலமாக்க இந்நேரம் தூங்கு!           (கண்மூடய்யா)

வரையற்ற கடமைகள் சுமையாய்த் தொங்கும்.
அரைகுறையாகிடும் தூக்கப் பொழுதுகள்.
அப்பப்பா தூங்கிடு! விரைவாகத் தூங்கிடு!
பொன்னய்யா காலங்கள் பொழுதோடு தூங்கிடு!  (கண்மூடய்யா)
 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
(20-5-2004  – 19-7.2006 ரி.ஆர்.ரி வானொலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பானது.)

 

 

                               

 
 

27. வித்தக அடமானம்.

 

வித்தக அடமானம்.

 

ஒருவருக்கு வாய்க்கும் சுத்த வித்துவத் திறமை என்பது ஒரு அரும் பெரும் சொத்து. இதை வைத்திருப்பவர்கள் பரிசுத்தத்திற்கு உரியவர்கள்.

அரசியல், கணக்கியல், பேச்சு, மருத்துவம், ஆசிரியத்துவம், கலைகள் பலவென பல்வகைத் திறமையாளர்கள் அவற்றை உத்தமமாகப் பேண வேண்டியவர்களாகிறார்கள். இந்த உத்தமத் திறமையாளர்கள் நாற்றமெடுக்கும் வகையில் தம் அசுர குணங்கள் தலை விரித்தாட அனுமதி கொடுத்துத் தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றனர்.

இவர்கள் சிறிதே தமது பாதையைத் திரும்பிப் பார்த்துச் சரி செய்வார்களேயானால் இவர்கள் பாதையில் கதிரொளி பல வண்ணங்களில் பிரகாசித்திட மாட்டாதோ!

இந்தியாவில் சரபோஜி மன்னர் காலத்தில் நரசய்யர் எனும் சங்கீத வித்துவான் சங்கராபரண இராகத்தைப் பாடும் பெரும் வல்லமை கொண்டவராயிருந்தார். இதனால் இவர் மன்னரால் பரிசு பெற்று ”சங்கராபரண நரசய்யர்”  என்றும் அழைக்கப் பட்டார். ஒரு தடவை இவருக்கப் பண நெருக்கடி வந்த போது, இராமபத்திர மூப்பனார் என்ற பெருநிதி படைத்த சங்கீத ரசிகரிடம் பணம் கடனாகக் கேட்டார்.

மூப்பனார் கடன் பணத்திற்கு அடமானம் கேட்டார். சங்கராபரணம் எனும் இராகமான ஆபரணம் தான் தன்னிடம் அடமானம் வைக்க உள்ளது என்றாராம்.
”பணம் திருப்பிக் கொடுக்கும் வரை சங்கராபரணத்தை எங்கும் பாடுவதில்லை” யென்று கடன் பத்திரம் எழுதப் பட்டது.

சங்கராபரணம் அடமானமானது.

அப்போது கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் உயர்ந்த உத்தியோகத்திலிருந்த வாலெஸ் அப்புராயர் என்பவர் கும்பகோணத்தில் ரெட்டியார் என்ற தன் நண்பர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றார்.
2-3 நாட்கள் விசேடமாக நடக்கும் செல்வந்தர் வீட்டுத் திருமணமாதலால் பல வித்துவான்களிற்கும் அழைப்பு அனுப்பப் பட்டது.

சங்கராபரணம் நரசய்யரும் அழைக்கப்பட்டிருந்தார்.

வாலெஸ் அப்புராயர் நரசய்யருடைய சங்கராபரண இசையைக் கேட்க விரும்பிப் பாடும்படி கேட்டார். அதைப்பாட இயலாது என்றார் நரசய்யர். காரணம் கேட்ட போது, நரசய்யர் விவரத்தைக் கூறினாராம்.

வாலெஸ் அப்புராயர் கடன் பணத்தையும், அதன் வட்டியையும் இராமபத்திர மூப்பனாரிடம் சேரச் செய்தார். மூப்பனார் இத்தனை நாள் சங்கராபரணத்தைத் தடை செய்ததற்கீடான பணத்தை வாலெஸ் அப்புராயரிடம் கொடுத்து நரசய்யரிடம் சேர்க்கும் படி வேண்டினாராம் இராமாத்திர மூப்பனார்.

என்னிடம் பணமாகக் கேட்காது, கடனாகக் கேட்டதாலேயே அடமானப்பத்திரம் எழுதி வாங்கினேன் என்றாராம்
நரசய்யரின் நேர்மையை நல்ல குணத்தை மெச்சினாராம்.

அடுத்த நாள் திருமண மண்டபத்தில் விடுதலை பெற்ற சங்கராபரண இராக மழை  பொழிந்து அனைவரும் மெய் மறந்தனராம். அதோடு அப்புராயரின் ஆஸ்தான வித்தவானாக நரசய்யர் ஆக்கப் பட்டாராம்.

இது அந்தக் காலம். நேர்மை, நாணயம், மதிக்கப்பட்டது.

இன்று ஒரு வித்தகன் குறிப்பிட்ட வட்டத்துள் மட்டும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட மேடைகளில் தான் ஏறவேண்டும் குறித்தபடி சிஞ்சிஞ்சா போட வேண்டுமென எத்தனை கண்ணுக்குத்  தெரியாத பல நூல் வேலிகள்!

அங்கீகார எல்லைகள் தான் எத்தனை!

வித்தகனுக்குச் சுதந்திர நில எல்லையே அல்லாத இந்த நிலை! வித்தகமும் இன்று அடமானப் பொருளாகி விட்டதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.
 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2007.
(இது முன்னைய ஒரு அனுபவம் காரணமாக –  இலண்டன் தமிழ் வானொலி இலக்கிய நேரத்திற்காக எழுதப்பட்ட ஆக்கம் – 2007ல்.)

                                         

Previous Older Entries