பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.
எப்படி வெளியே பிள்ளைகள் காயப்படுகிறார்கள்!
பாலர் பாடசாலையில் வெளியே உலா செல்லும் நாட்களில் தெருக்களைக் கடக்கும் போது, சன நெரிசலிற் புகும் போது, குழுநிலையில் சிறுவர்கள் ஒருவருடன் ஒருவர் கைகளைக் கோர்த்து, சோடி சோடியாக இடையில் பெரியவர்களுடனும் நடக்க வேண்டும்.
எல்லோரும் சோடி சோடியாகக் கை பிடித்து நிற்க இறுதியாக 3 வயதுடைய ஒரு ஆசியப் பெண் குழந்தையும், ஒரு டெனிஸ் ஆண் குழந்தையும் எஞ்சி நின்றனர்.
”கையைக் கோர்த்திடு” என்றேன்…பெண் குழந்தையிடம்.
மாட்டேன் என்று மறுத்தாள்.
” இப்படி உலாப் போகும் போது சிறு பிள்ளைகள் கை பிடிக்க வேணும் என்ற வழக்கத்தை மறந்து விட்டாயா?..” என்றேன்.
”நான் ஆண் பிள்ளைகள் கையைப் பிடிக்க மாட்டேன்!”…என்று அடம் பிடித்தாள்.
” ஏன்” என்ற போதும் (இக் கேள்வியை மிக மன நோவுடனேயே நான் கேட்டேன்)
”மாட்டேன்…மாட்டேன்”… என்றாள்.
பின்பு நானும் சேர்ந்து அவளோடு கை பிடித்து நடந்தோம்.
எமது வற்புறுத்தலால் அவளது கண்கள் கலங்கி விட்டன. அழுதாள். அவளது நிலைமை எனக்கு விளங்கியது.
பின்னொரு தடவை – வேறொரு நாள் சைக்கிளோடி விளையாடிய போது, ஒரு ஆபிரிக்க ஆண்பிள்ளை 4 வயதுடையவன் எனக்கு பெண் பிள்ளையோடு சைக்கிளில் இரட்டையாக, சமமாக உட்கார முடியாது என்றான்.
”ஏன்” என்றேன்.
” ஆண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்., பெண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்.” என்று அடித்துக் கூறினான்.
”..யார் கூறியது?…” என்றேன்.
”…அம்மா..கூறினார் ” என்றான். (நானும் ஒரு ஆசியப் பெண் ஆனாலும், ஐரோப்பியக் கலாச்சாரப் பாலர் பாடசாலை ஆசிரியையாகப் பயிற்றப் பட்டு ஐரோப்பியரோடு வேலை செய்தவள். புலம் பெயர்ந்த பிள்ளைகள் நிலை இது.)
இது தான் கலாச்சார இடிபாடு.
வீட்டில் கூறும் பிற நாட்டுக் கலாச்சாரப் புத்திமதிகள் பிள்ளைகளிடம் வேலை செய்கிறது. ஆனால் அது இங்கு (ஐரோப்பியக் கலாச்சாரத்தில்) வெளியில் எடுபடாது.
ஆணும் பெண்ணும் கலந்து பழகி விளையாட வேண்டும். அவர்கள் கலந்து பழகி விளையாட நாமோ தடை செய்வதில்லை, ஊக்குவிக்கிறோம். இது எமது தொழில்.
புலம் பெயர்ந்த பிள்ளைகளிற்கு கூறும் புத்திமதியின் விதம் பிழையானது என்பது எனது கருத்து ஆணும் பெண்ணும் சேர்வதே கூடாது என்று கூறி சேரும் ஆவலைப் பெற்றோர் மறைமுகமாகத் தூண்டுகின்றனரோ என்று தோன்றுகிறது.
நன்கு விளக்கமாக இது கூறப் படல் வேண்டும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பிள்ளைகளிற்கு உங்கள் முழு அன்பை, ஆதரவைக் கொடுப்பதே.
எப்படி வெளியே அடிபடுகிறார்கள் பார்த்தீர்களா?
கிளப், பாடசாலை, ஓய்வு நேரப் பாடசாலைகளில் இதை விட நிலைமைகள் வேறு. டிஸ்கோ, சேர்ந்து பயணங்கள் போய் இரவு தங்குதல் என்று பல. இதில் பயணத்திற்குக் கொண்டு போகும் பொருட்களின் நினைவுப் பட்டியலில் கருத்தடை உறையும் ஒரு பொருளாகப் பாடசாலையால் எழுதப் பட்டிருக்கும்!
இவைகளைப் புரிந்து கொண்டு அணையுங்கள்! இல்லாவிடில் உடைந்து விடுவார்கள் பார்த்தீர்களா!
எவ்விடயமானாலும் பக்குவமாகக் கூறிட வேண்டும்!
கவனியுங்கள்!
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2004.
(இது இலண்டன் தமிழ் வானொலி ” ஓடி விளையாடு பாப்பா” நிகழ்வில் 5-9-2004 ல் எழுதி வாசிக்கப்பட்டது.)
(ஒரு மழை நாளில் சைக்கிளோடும் விளையாட்டு…)