கவிதைக்குப் பொய்யழகு.
ஆதிகாலப் புராணங்கள் காவியங்கள்,
மனித வாழ்க்கை முறை, போர் முறை, சில அறங்கள், கூட்டு வாழ்வு முறை ஆகியவற்றை எடுத்துக் கூறவே காவியங்களாகப் பரிணாமம் பெற்றது.
பழைய கதைகளையே இன்னும் புரட்டுகிறோம். புதியவைளைப் பேசுங்களேன் என்கிறீர்களா? பேசலாம்.. கோவலன் மாதவிக்குப் பதிலாக கிளின்ரன் மோனிக்கா, பின்லாடன் பற்றியெல்லாம் பேசலாம்.
யானைப் பாதங்கள் போன்ற காற்சட்டை புதிய பாணியாக வர, காலோடு இறுக்கமான காற்சட்டைகளை இளையவர்கள் ‘சீ! இது சுத்த கர்நாடகம்! ‘ என்று தூர வீசுகின்றனர். பின்பு ஐந்து, பத்து வருடங்கள் செல்ல, காலோடு ஒட்டிய காற்சட்டை நவீனமாக வர, யானைப் பாதம் கொண்ட காற்சட்டையை ‘ சீ! இது சுத்த கர்நாடகம்!’..என்று தூரத்தே தள்ளுகிறோம்.
இது போலவே வாழ்வு முறைகளையும் அவரவர் மனோ பாவப்படி ஒதுக்குவதும், எடுப்பதும், பழிப்பதும், புகழ்வதுமாக உள்ளோம்.
எல்லாக் கருத்துக்கும் வரவேற்புக் கொடுத்து, விரும்பியவர்கள் விரும்பியதைப் பின் பற்றும் சுதந்திரம் மேற்கு நாட்டவர் மனநிலை. எம்மவர்கள் இது ஏன், அது ஏன் என்று இடித்துக் கூறுவார்கள். இது தான் பேதம்.
கண்ணுக்கு மையழகு! கவிதைக்குப் பொய்யழகு!
வால்மீகி இராமாயணம், கம்பராமாயாணம் என இரண்டு வகை. இது தவிர இந்தியில் துளசிதாசர் இயற்றினார். இன்னும் பலர் எழுதியிருப்பார்கள். வால்மீகியினது ஆதிகாவியம். கம்பர் தன் கற்பனைத் திறமையால் புதுக் காப்பியமாக வரைந்துள்ளார்.
வாலிக்கு அங்கதன் என்ற மகன் பற்றி வால்மீகி சொல்லாதவற்றைக் கம்பர் புதிதாகப் படைத்துள்ளார். வாலி இறக்கும் போது மகன் அங்கதனை இராமரிடம் ஒப்படைத்து அவனைக் காத்து அருள் புரியும்படி கேட்கிறான். அவனை அடைக்கலமாக ஏற்றதற்கு அடையாளமாக தன் உடைவாளை ராமர் அங்கதனிடம் கொடுக்கிறார். அதிலிருந்து இராமன் பக்கத்தில் உடைவாளுடன் நிற்பதை அங்கதன் தன் கடமையாகக் கொள்கிறான். முடிசூட்டு விழாவிலும் ‘ அங்கதன் உடைவாள் ஏந்த ‘ என்று கம்பன் பாடியுள்ளார். வாலி இறக்க அவன் மனைவி தாரையை சுக்கிரீவன் மனைவியாக ஆக்கினான், என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது.
கம்பரோ தனது கதையில் அவளை சிறப்புப் பெண்ணாக்கி, சுக்கிரீவனைப் பிழை விடாதவான் ஆக்குகிறார். தாரை பூச்சூடாது மங்கல ஆபரணம் அணியாது சோகமாய் விதவை வாழ்வு வாழ்வதாகக் கூறிப் பெண் குலம் தாரையைப் போற்றும் வண்ணம் எழுதியுள்ளார். கவிதைக்குப் பொய்யழகான இன்னும் பல பொய்களை எழுதலாம் நேரம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.
ஆக்கம் வேதா இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-11-2005.
In Anthimaalai web site:- http://anthimaalai.blogspot.com/2011/08/1_27.html