மோகன முறுவலில்…..
மோகன முறுவலில் மயங்காதார் யார்!…..
”ஹாய்!…எனக்கு உன்னைப் பார்க்க முடிகிறது. உன் குரலைக் கேட்க முடிகிறது. எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உன்னோடு சேர்ந்து இருப்பது மிக இன்பமயமானது…”
பச்சிளம் பாலகன் வள்ளுவன் இந்த உலகத்திற்கு வந்து நான்கு கிழமைகள் தான் ஆகிறது. சிறு புன்னகை மூலம் தான் அவனால் செய்தி தெரிவிக்க முடியும். மேலே கூறிய தகவலை அவன் அப்படித்தான் தெரிவித்தான்.
அந்த மின்னல் கீற்று முறுவலைப் பார்த்து மனமிளகி மறுபடியும் அவனைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள். நீங்கள் ஆனந்தத்தால் நிரம்பி வழிவீர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
தனது குழந்தையின் முதற் சிரிப்பால் பெறும் அனுபவம் மனித வாழ்வில் ஒரு மிகப் பெரிய அனுபவமாகும்.
ஆரம்பத்தில் அந்த மோகன முறுவல் ஒரு ஓட்டமானதாகத், தாயானவளுக்கு நிச்சயமில்லாததாக, பிள்ளை சிரிக்கிறானா இல்லையா என்று உறுதியின்றி இருக்கும்.
திடீரென எந்தவிதத் தடுமாற்றமுமின்றி உங்களைப் பார்த்துத் தான் அவன் சிரித்தான் என உணர்வீர்கள்.
குழந்தையின் முதற் சிரிப்பு சிறு சத்தங்களை உருவாக்கி இது ஒரு விளையாட்டுப் போன்று தோன்றும்.
உங்கள் கரத்தில் பிள்ளையைச் சாய்வாகத் தூக்கி நிமிர்த்திக் கண்களோடு கண்களின் தொடர்பைக் கொள்ளுங்கள். மிக இன்பமாக நிறையச் சிரிப்புகள் தொடரும். ஒரு மாதத்தினுள் குழந்தையின் சிரிப்பு மிக வளர்ச்சியடையும். இச்சிரிப்பு மிக நீளும். குழந்தையின் முகத்தையும் ஒளியடையச் செய்யும்.
அன்றாட வாழ்க்கைக் கடன்களால் நீங்கள் அமுங்கி, ஒளியிழந்து இருந்தாலும், கோபமாக இருந்தாலும் அந்தக் குழந்தைச் சிரிப்பை நீங்கள் பார்க்கும் போது ஈடு இணையற்ற ஆனந்தமடைவீர்கள்.
மறுபடி ஒரு பெரிய சிரிப்பைக் கொடுப்பது தவிர உங்களிற்கு வேறு வழியே இல்லை. உங்களால் எது விதத்திலும் இதிலிருந்து தப்பவே முடியாது.
ஒரு மாதக் குழந்தையான கைக்குழந்தை நீங்கள் தான், தன் பெற்றோர் என்று உங்களைப் பார்த்துச் சிரிப்பதில்லை.
மற்றைய பெரியவர்களையும், தன் கண்பரப்பில் விரிபவர்கள் அனைவரையும் பார்த்துச் சிரிக்கிறது.
ஏனெனில் அது ஒரு வகையான பேசப்படும் குரல். தொடர்பாடல் முறை.
தன்னைப் பற்றிய கவனத்தை உங்களிடம் எழுப்பி, தன்னைப் பார்க்கச் செய்கிறது.
உங்களுக்கே உங்களுக்காக பிள்ளை சிரிக்க நீங்கள் நான்கிலிருந்து ஏழு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
சிரிப்பெனும் தூண்டிலால் ஒரு குழந்தை ஆறு மாதத்திற்குள் யாராயிருந்தாலும் எல்லோரையும் தன் பரப்பினுள் இழுக்கிறது.
ஏழு மாதத்தின் பின்னரே நெருங்கியவர்கள், தனக்குத் தெரிந்தவர்கள் என்று அடையாளம் கண்டு சிரிக்கிறது.
வெளியார் யார், தனது நெருங்கியவர் யார் என அடையாளம் புரிகிறது.
நன்கு சிரித்து விளையாடிய பிள்ளை ஏன் திடீரென தெரியாதவர்களைப் பார்த்து ஒரு வித்தியாசமான நிலையில் ஓதுங்குகிறது என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இது ஒரு சாதாரண நிலையிலான உங்கள் பிள்ளையின் முன்னேற்றமே.
நீங்கள் இதையிட்டு மகிழ வேண்டும். அதை மதிக்கப் பழக வேண்டும்.
பிள்ளை ஒரு படி முன்னேறியுள்ளான், வளர்ந்துள்ளான் என்று நீங்கள் மகிழ வேண்டும்.
ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-10-2004.
( இது யெர்மனிய இந்து மகேஷ் ன் ”பூவரசு” இனிய தமிழ் ஏடு- கார்த்திகை, மார்கழி 2004 இதழில் பிரசுரமானது.)
0.000000
0.000000