மல்லிகை மயக்கம்.
மதிஒளி மயங்கி கதிரிடை தொலைய,
புதிய இதழ் விரித்த புதுமலர்ச் சோலை.
புதிதான சுகந்தம் புது உணர்வு வேளை.
அதிகாலை வேளை, புது நாளின் காலை.
பச்சை வான வெண்ணிற நட்சத்திரங்கள்,
இச்சையுடன் பிறந்தகம் நழுவிய சித்திரங்கள்,
இசைந்து நிலமகள் அணைத்த தேவதைகள்,
வசந்த வாரிசுகள், வசீகர மல்லிகைகள்.
மல்லிகைப் பந்தலோ! முத்துமணி மேகமோ!
இல்லற முன்றலில் மயக்கும் வசந்தமோ!
இல்லறச் சோடியின் மன்மத வில்வளைவோ!
கொள்ளை கொள்ளும் மதுர சுகந்தமோ!
மல்லிகை மழை மன்மதக் கணைகள்,
வெண்பனித் தூறலாய் தரணிமேல் கலைகள்.
வெள்ளைக் கம்பளம் பூமகள் பந்தம்.
அள்ளும் கைகளில் மென்மை சொந்தம்.
பார்த்துப் பார்த்துச் சேர்க்கும் மலர்களைக்
கோர்த்து மாலை தொடுக்கும் கோதையர்,
ஈர்த்து மயங்கி கூந்திலில் இணைப்பார்.
சேர்க்கும் குழலில் இணையும் சுகந்தம்.
கூந்தலில் முகம் புதைத்துக் கூடும் காளையைக்
காந்தமாய் இழுக்கும் மன்மத மலரே!
காந்த மின்சாரம் இளமொட்டு அழகிலா!
ஏந்துமுன் மேனியின் மெத்தை இதழிலா!
தொன்மையாம் உன் சுய சுகந்தமா!
வெண்மையாம் உன் வேடமில்லா நிறமா!
என்னையும் மயக்கும் மல்லிகை மலரே!
என்ன விந்தையுன் தூய்மைச் சுகந்தம்!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
(19-6 2001 ல் தமிழ் அலை – கவிதை பாடுவோமிலும்,
10-2-2003ல் இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.)
*
மல்லிகை – (வேறு)
சுயநலமற்ற மல்லிகை
வியக்கும் சுகந்தம்.
இயல்பு மணம்
மயக்கும் மன்னனை
¤
உயர்ந்த கொண்டையிலே
இயலணி (இயற்கை அழகு) தரும்
பயனுடை மல்லிகை
நயனம் பெண்ணழகிற்கு.
¤
தயக்கமின்றி கூந்தலில்லிட
தூய உணர்வு
இயக்கும் மன்னனை
ஐயமின்றி நெருங்குவான்.
¤
கயவனும் மல்லிகையில்
வயகரவாய் மயங்குவான்
குயவனும் குறத்தியை
மயக்கிட கொடுப்பான்.
¤
தூயது மென்மையானது.
நியமமாய் மல்லிகையும்
கையளிக்கும் அல்வாவும்
தியக்கமான (மயக்கம்) மன்மதனம்பு.
¤
நயத்தகு பிலிப்பைன்சின்
யெயமுடைய தேசியப்பூ.
பயனாகும் மருத்துவத்திற்கு.
வியப்பு இருநூறினமுண்டாம்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-8-2016
*
என் இரண்டாவது வலையில் மல்லிகை பற்றிய தலைப்பில் இன்னொரு கவிதையை இந்த இணைப்பில் காணலாம்.