வேதாவின் மொழிகள். 15
வரி. 16-10-2004.
உள்ளங்கை வரியில் சிலர் வாழ்க்கை வரியைக் கூறுகின்றனர். சித்திர வரிகளிலும், அதன் நிறங்களிலும் சிலர் மனவரியைக் கூறுகின்றனர். கண்களால் காதல் வரி கூறாமல் கூறுவர். காதல் வரியை இன்னொருவன் முத்த வரியில் காட்டுவான். கடித வரியில் காட்டுவான் அடுத்தொருவன். கானல் வரி பாடுவான் செம்படவன்.
பகுத்து அறியும் தன்மை கொண்ட நாம் கோயிலில் அருச்சனைக்கும், பிரசாதம் வாங்கலுக்கும் வரிசை தவறி கும்பலாக இடிபடுவது போலன்றி, வானத்தில் பறவைகள் வரிசையாக அழகாகப் பறக்கின்றன – உயர்திணை, அஃறிணை வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.
அன்னம் (சோறு) இல்லையென்று ஊரில் அழுபவர் ஒரு புறம். அன்னம் (சோறு) உண்ணவே அந்நியப் படுவது புலம் பெயர்வின் மறுபுறம். அந்நிய உணவுக் கவர்ச்சி இது.
26-7-2004
குழந்தைகள் மனதில் நன்கு பாய் விரிக்க மெல்லென தமிழைப் பாய்ச்சுங்கள். பசுமரத்தாணியாகப் பாய்ச்சுங்கள்.
ஓன்றிணைப்பின் சாரம் சம்சாரம். அன்பின்சாரம், அறிவின் ஈரம், அமைதியின் ஆரம் பூணவேண்டும் சம்சாரம்.
விடாமுயற்சியாளன் நிறைய சாதிப்பான்.சோம்பேறி இதை நினைக்கவே மாட்டான்.
வாலிப வயதினர் தலை காலியாக இருந்தால் சாத்தான் புகுந்திடுவான். பொறுப்புகள் கடமைகளை அவர்களிடம் ஒப்படையுங்கள். காலியாகத் திரியவும் நேரம் அமையாது.
நற்செயல், நற்பண்பால் சமூகத்தில் நமது நிலைப்பாட்டை ஒரு நல்ல நிலையில் நிலை நிறுத்த முடியும். நிலை குலைந்த வாழ்வு நமது நற்பெயரை நிலை நாட்ட மாட்டாது.
புகைத்தலால் ஈரல் குலை கருகுதலும், உடல் சுகாதாரம் குலைதலும் நிதர்சனமாகியும், பலர் தமது உயிருக்கு வாழ்ந்தபடி, தாமே கொள்ளி வைப்பது தான் வியப்பிலும் வியப்பு!
ஆதவன்.(சூரியன்) 2-5-2006.
ஆதவனின் கடமையுணர்வு, விடாமுயற்சி ஒரு
மாதவத்திலும் நற்பயன் தரும்
நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
ஆதவனாய்ப் பயன் தரும்.
பிரதிபலன் கருதாத கொடையாளி ஆதவன்.
பிரதியுபகாரம் வேண்டுபவன் மனிதன்.
மறைந்தாலும் பேசப்படுவாய் ஆதவனாய்..நீ
நிறைந்த அன்பைக் கொடு.
எறிக்கும் நாற்பது பாகை ஆதவமும்
தெறிக்கும் நாற்றமுடைய வார்த்தையும் சமம்.
நல்லவை ஆதவன் பொற்கதிராகும் அல்லாதவை
கதிர் மறைக்கும் கருமேகம்.
18-2-2006.
பிள்ளைகளை அடித்து ஏசி வளர்த்தது அன்று. பிழைகளை எடுத்துக் கூறி, பயனை விளக்குவது இன்று.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-8-2011.
0.000000
0.000000