8.
பனைவளவில் அப்பா உயரமான பாத்தி செய்த பின்னர் கடகம் ஒன்று கொண்டு வந்து, ” வா பனங்கொட்டைகள் பொறுக்குவோம்”.. என்று> சுற்றியுள்ள பனைகளின் கீழ் கொட்டைகளைப்
பொறுக்கிக் கடகத்தில் போட்டோம்.
படத்தில் நீங்கள் பார்க்கும் கடகம் சாதாரணமாக் வீட்டில் சபையில் உணவு பரிமாறும் போது இதில் சோறு, பப்படம் , பலகாரங்கள் வைத்துப் பரிமாறுவார்கள். பனை மட்டை நாரில் செய்த கடகத்தை, குப்பை அள்ளவோ, பனங்கொட்டை பொறுக்கவோ பாவிப்பார்கள். அப்பா கொண்டு வந்தது நாரில் பின்னிய கடகமே.
இதில் நீங்கள் பார்ப்பது பனம் பழம். இதனுள் கொட்டையே
நிலத்தில் ஊன்றப்பட்டது.
ஆச்சி அப்பு வீட்டு மாடுகளை இங்கு மேயக் கட்டினால் பனம் பழங்களைப் பிரித்து நக்கிச் சாப்பிடும். பழத்திலிருந்து வேறான கொட்டைகள் வெயிலுக்குக் காய்ந்து கொட்டைகள் மீந்திருக்கும்.
அப்பா செய்த மண் மேட்டில் இந்தக் கொட்டைகளை ஒரு அடி இடைவெளியில் புதைப்பார். நான் பார்த்தபடி ”ஏனப்பா இது? ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ” என்பேன்.
”..இவை மழை, வெயில் பட்டு முளை விட்டு வளரும். நாங்கள் இதை வேற இடத்திலும் நட முடியும். வேற ஆட்களுக்கும் கொடுக்கலாம்”.. என்பார்.
இங்கு
.
…மரம் நடும் உணர்வு,
இயற்கை பேணல்
என்பன,
செயல்களால் பிள்ளைகளுக்குப் பெற்றோரால் ஊட்டப் படுகிறது.
இதன் பின்னர் அடிக்கடி அப்பாவோடு போய் இதைப் பார்ப்போம். சில முளை விடும். சில கொட்டைகள் பூஞ்சணம் (பூரான்)ஆகி விடும்.
பூரானைக் கோடரியால் பிளந்தால் உள்ளே சுவையான வெள்ளை நிறப் பூரான் மிக ருசியானது. வீட்டிற்கு. வேலைக்கு வரும் ஆட்களிடம் கேட்டு வெட்டிச் சாப்பிடுவோம்.
இது மட்டுமல்ல – கிணற்றடியில் நாம் குளித்து, கழுவும் நீர் சிறிது தூரம் வாய்க்காலில் ஓடி பின்னர் பரவலாக வளவினுள் பாயும். எப்போதும் ஈரலிப்பான பகுதியாக இருக்கும். இங்கு காய்ந்த முழுத் தேங்காய்களை (செத்தல் தேங்காயை) குழியில் புதைப்பார். இது தனக்கு மட்டுமல்ல, கூப்பிடும் தூரத்தில் உள்ள ஆச்சி வீட்டுக் கிணற்றடியிலும் சென்று புதைப்பார்.
தென்னங்கன்று
எப்போதும் தென்னங் கன்றுகள் தயார் நிலையில் என் தலைக்கு மேல் வளர்ந்திருக்கும். நாம் உள்ளே புகுந்து சோலை போலத் தடவுவோம். தென்னை ஓலைகளாகப் பிரியாது ஒட்டியபடி இருக்கும். மிகவும் குளிர்மையாகவும் அந்த இடம் இருக்கும்.
எப்படி இவைகளை மறப்பது!
பசும் நினைவாகப் படம் விரிகிறது எப்போதும்.
இன்று காணிகள் கைமாறி, யார் யாரோ குடியேறி, வீடுகளும் இடிந்தும், புதிதுகள் கட்டப்பட்டும்…
உண்மையில் இவை தொலைந்து போன சொர்க்கங்களன்றி வேறு என்ன!..!!!!…..
(17-10-2012 ஆனந்த விகடனின் ”காடுகளின் காதலன்” எனும் ஆக்கமும் தீக்குச்சி பற்ற வைத்தது போல என்னுள் சுடரிட்டதன் விளைவே இந்தப்பதிவு.)
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-11-2012.
0.000000
0.000000