பெற்றோர் மாட்சி.
(இலண்டன் தமிழ் வானொலியில் சனி, ஞாயிறில் பெற்றவருக்காக நடக்கும் நிகழ்வில் எழுதி வாசித்தவைகள்)
31-7-2005.
நெஞ்சம் நிறைந்து கொஞ்சம் குறையாது
பிஞ்சு வயதிலிருந்து பஞ்சாக என்னைப் பாதுகாத்து
மஞ்சுக்குள் துயிலும் அம்மாவே! உன்
மஞ்சாடி குறையாத அன்பினை
மிஞ்சிட உலகில் ஏதுண்டு! இம்மியளவும்
நெஞ்சம் இதை மறவாது.
6-8-2005.
வலிமை கொண்ட பெற்றோர் அன்பு தினம்
பொலிவு கொண்டெமை ஆட்கொள்ளும் அன்பு வனம்.
மெலிவு கொள்ளாத எம் பணிவு மந்திரம்
எளிமையாய் அவரை மகிழ்விக்கும் அதிகம்.
7.8.2005.
கொஞ்சும் நெஞ்சு கொண்ட பெற்றவர்
தஞ்சம் நிறை தியாக சுரங்கங்கள்.
மிஞ்சும் சேவையில் வலது கரங்கள்.
வஞ்சமில்லாத பெற்றவர் பூவுலகத் தெய்வங்கள்.
13-8-2005.
வரம் தரும் இறைவன் பெண்களிற்கு
உரமாக காலத்திற்கும் பெற்றவர் அணைப்பை
நிரந்தரமாக்காது பாத்திரம் மாற்றி
தரம் மாற்றும் வாழ்வு சுபம் பெறுகின்றதா?
14-8-2005.
உள்ளம் முழுதும் கள்ளம் நிறையாது
தௌ;ளத் தெளிந்த பரிசுத்த அன்பை
பள்ளமின்றி அள்ளித் தருவதில்
எள்ளளவும் தயற்காது தாயுள்ளம்.
19-8-2005.
உலகுக்கொரு வாரிசை உருவாக்கிக் கணமும்
விலகாது கண்ணிமையாதெமைக் காத்து,
திலகமாய் உலகில் திகழென்று பார்த்தல்
இலகுவான கடமையல்ல. பெற்றவர் மனம்
கிலமாகாது காத்தலெம் கடன். அவர்கள்
நலமாக நாம் பார்க்க வேண்டியவர்கள்.
20-8-2005.
தாயே தனிப் பெரும் கருணையே!
தாயகமாக மனதில் தரிப்பவளே!
தயாள மனம் கொண்டவனாய்
தாங்கி அவளுக்குத் தாரமானவன் தந்தையே!
27-8-2005.
உருகியே பாசத்தில் தம்மைத்
தருகின்ற பெற்றோரை மதித்தல்
அருகி வருதல் ஆரோக்கியமல்ல.
கருவோடு திருவானவர்களென உணர்தல்
பெருமைமிகு பணியாகும்.
துருவநட்சத்திரமாகவன்றோ அவர்கள் உயர்ந்தவர்கள்.
ஆயுள் முழுவதும் ஆயாசமின்றி
ஆழமாக என் செயல்கள் நிலைக்கவும்
ஆழமான கருத்துகள் பேசவும்
ஆதிக்க ஆளுமையை எனக்குத் தந்த
ஆருயிர்ப் பெற்றொர் மிக ஆளுமையுடையவர்கள்.
18-9-2005.
‘பூவாக மலர்ந்தாயே’ என்றென்னை அணைத்திருப்பார்கள்.
‘ பாவாக எம்முள்ளெ பாடுகிறாய்’ என:றிருப்பார்கள்.
சேயாக நான் பிறந்து இன்று சீராக வாழ்வதற்கு
தூய என் தந்தைக்கும் தாயிற்கும் வாழ்த்துகள்!
தேனாக உங்கள் நினைவு இனிக்க நாளும்
ஊனாக, உயிராக என்னுள் ஊறி மலர்ந்துள்ளீர்கள்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.