அனுபவம். அங்கம் 18
( படங்களில், புறாக்களும் அதற்குத் தீனி விற்பவரும், கோயில் படிக்கட்டுகள், குகை வாசல்கள், இறுதியாக காணும் கோயிலும்.)
22ம் திகதி காலை 8.00மணிக்கு சாமியுடன் 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பட்டு கேவ்ஸ் – பத்து குகைக் கோவிலுக்குச் சென்றோம். சுண்ணாம்புக் கல்லினால் ஆன மலையில் உள்ள குகைக் கோயில் இது. நிலத்திலிருந்து ஓரளவு செங்குத்தான படிகள் கொண்ட கோயில்.
கீழே உள்ள கோயிலில் வணங்கி அருச்சனைப் பொருட்களை வாங்கி, உடனே ஒரு உறையில் போட வேண்டும். ஏமாந்தீர்களோ குரங்குகள் தட்டிப் பறித்து விடும். இதை விட எண்ணிக்கையற்ற புறாக்கள் உள்ளன. புறாக்களுக்கு பெரிய சாக்கு உறையில், வாளியில் தானியங்களை ஒரு பெண்மணி விற்கிறார். இது அவரின் அன்றாடப் பிழைப்பு ஆகும். புறாக்களுக்குத் தீனியைப் போட்டு அவைகளுக்கு நடுவில் நிற்கும் அனுபவம் அற்புதம்.
272 படிகள் கொண்ட கோயில். இதில் ஏறிட வசதியாக கம்பிகள் பதித்துள்ளனர். இயலாமை கொண்டவர்கள் மெல்ல மெல்ல எறிட முடியும். இடது பகுதியால் ஏறி, வலது பகுதியால் இறங்க முடியும். உள்ளேயும் மேலே மேலே நடக்க வேண்டும். சாமி எமக்கு ஒன்றரை மணி நேரமே தந்தார். தான் எங்களுடன் மேலே ஏறி வரவில்லை என்று கூறிவிட்டார். மூச்சை நன்கு இழுத்து விட்டு, ஆறுதலாகப் போய் வாருங்கள். 5,6 படிகளுக்கு ஒரு இடைவெளியாக இருந்தது. நின்று நின்று ஏறினோம்.
100 வருடங்களுக்கு முன்னே ஒரு வெள்ளைக்காரர் இந்தக் குகையைக் கண்டு பிடித்து, தமிழரிடம் ஒப்படைத்து, கோயில் உருவாக்கும் படி கூறினாராம். பட்டு கேவ்ஸ் என்ற இப் பெயரை மாற்றிவிடப் பலரும் முயன்றனராம். இந்தப் பெயரில் இக் கோயில் பிரபலமானதால், பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால், பெயர் மாற்றம் நடை பெறவில்லை என்று சாமி கூறினார்.
படத்தில் தெரியும் படிகளில் ஏறி முடிய முருகன் மயிலுடன் பட்டுக் குடையுடன் நிற்கிறார். பின்னர் சிறிது கீழே இறங்கி படிகள் உள்ளே தொடருகிறது. இடைவெளி அத்துடன் படிகள் என்று தொடர்கிறது. இறுதியில் வள்ளி தெய்வயானை முருகன் கோயில் உள்ளது.
நேயர்களே கற்பனையில் கூட நினைக்க முடியாதது இந்த பக்ரு குகைக் கோயிலின் தோற்றம். இப்படி கல்லுக்குள் ஒரு அதிசயமா என எண்ணத் தோன்றியது.
கோயிலுடன் ஒரு குகை. இது தவிர இன்னும் இரண்டு குகைள் அருகினிலே உள்ளதாம்.
இதில் ஒரு குகையை மின்சார தேவைகளுக்காக மின்சார நிலையத்தினர் கையாளுகிறார்களாம். இன்னொரு குகையில் பல கடவுள்களின் உருவங்கள் வைத்து ஒரு மியூசியமாக – நூதன கண்காட்சியகமாக நடத்துகின்றனராம். சுப்பரமணியர், சிவன், பயமுறுத்தும் துர்க்கா, அர்த்த நாரீசுவரர் போன்று பல உருவங்கள் உள்ளதாம்.
இன்னொரு குகையில் மின்சாரமின்றி வெளிச்சம் உருவாகிறதாம். இது எப்படி, எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை என கூறப்படுகிறது. இங்கு உள்ளே சென்று பார்க்கத் தலைக்கவசம், பாதுகாப்பு உடைகளுடன் வழிகாட்டிகளுடன் முன் அனுமதியுடனேயே செல்ல முடியும் என்று நமது வழிகாட்டி சாமி கூறினார்.
உருவத்தில் சிறிய மந்திகள் பாய்ந்து குதித்தோடியபடி உள்ள ‘பக்து கேவ்ஸ்’ – பத்து குகைக் கோவில் தைப்பூசத் திருவிழா மிகப் பெரும் விழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடுவார்களாம். முழு மலேசியாவிலும் இது பெரும் விழாவாம். மில்லியன் கணக்கில் மக்கள் கூடி, இத் திருவிழாவில் வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்கள் என்று நிறைவேற்றுவார்களாம். கோலாலம்பூரின் சிறீ மாரியம்மன் கோவிலில் இருந்து பத்து குகைக் கோயிலுக்கு வருவார்களாம். முதுகிலும், நாக்கிலும் ஊசிகள் குத்தி, காவடி, வேல் காவடி, காவடியாட்டம் பால்குடம் ஏந்துதல் என பிரார்த்தனைகள் நடைபெறுகிறதாம்.
27-9-2003.
——–மிகுதியை அங்கம் 19ல் பார்ப்போம்.——–