22. ஆக வேண்டியது இது தான்…
27 Jan 2012 11 மறுமொழிகள்
ஆக வேண்டியது இது தான்…
வாழ்வில் மனிதர் தேகப்பயிற்சி செய்வதால் மனதில் உற்சாகத்தையும், அதனால் வாழ்வில் மகிழ்ச்சியையும் பெறுகிறார்கள்.
ஆனால் தேகப்பயிற்சி செய்வதால் மனிதன் களைப்பு அடைகிறான் என்று சிலர் எண்ணுவது தவறாகும். இதற்கு எதிர் மாறாகவே செயற்பாடுகள் நடைபெறுகிறது. தேகாப்பியாசத்தால் நல்ல உடல்நிலை, தசைகளின் நல்ல செயற்பாடு, நாளாந்த வேலைகளைக் குறைந்த உடற் சக்தியில் செய்வது, குறைந்த களைப்பு எனும் நன்மைகளே உருவாகிறது.
குறைந்தது முப்பது நிமிடங்கள் தேகப்பயிற்சி செய்வது நல்லது என்பது சுகாதாரப் பகுதியின் ஆலோசனையாகிறது. முப்பது நிமிட நேரத்திற்கும் குறைந்த நேரப் பயிற்சி நல்ல உடற் பயிற்சிக்கு ஆதாயமாக இருக்காது. ஆனால் அறுபது நிமிடப் பயிற்சி, இரத்தக் குழாய் அடைப்பைக் குறைத்து, அதனால் இறப்பு வருவதை அறுபது விகிதம் தடுக்கிறது என்கிறார்கள்.
நாங்கள் அசையும் போது எமது தசைகளைப் பாவிக்கிறோம். தசைகள் பாவிப்பதற்காகவே உருவாக்கப் பட்டது. இது ஒருவகைச் சுரப்பி போன்றது.
பாவித்தாற் தான் பயன் பாவிக்காவிடில் பாழ்.
தசைகளை இயக்குவதால் இன்சுலின் எரிந்து சீனிச் சத்தாகி, இரத்தத்தினூடு பாவனையில் கலக்கிறது. தசைகளைப் பாவித்தலால், அதாவது உடற் பயிற்சியால் ஈரல், இதயம் நன்றாக இயக்கப் படுகிறது.

மருந்துகள் செய்ய முடியாததை உடற்பயிற்சி (தேகாப்பியாசம்) தருகிறது.
உடலை அசைப்பது வாழ்வில் ஒரு ஒளிப் பாதையைக் காட்டுகிறது.
உடலிற்கு அமைதியை, மனதிற்கு மகிழ்வையும் உடற்பயிற்சி தருகிறது. மேலும் பய உணர்வை, மனக் குளப்பங்களைத் தீர்க்கிறது. படபடப்புக் குணம் குறைந்து, மனதிற்கு நிதானம் கிடைக்கிறது.
நானொன்றும் புதிதாக இவைகளைக் கூறிவிடவில்லை. எத்தனையோ அன்புச் சகோதர, சகோதரிகள் இவை பற்றியும், செயல்முறைகள், செயற் கருவிகள் என்று பல விளக்கத்துடன் வலையில் பதிவிடுகிறார்கள். அதனால் பயன் பெறுவதே சிறப்பு.
சோகம் வேண்டாம் வாழ்வில்.
சாக வேண்டாம் நோயால்.
யாகம் போலிதைச் செய்வதால்
தேகப்பயிற்சி வாழ்வில்
ஏகபோக பலம்(ன்) தரும்.
வேகமான பலன் பெறலாம்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-1-2006.
(யேர்மனி மண் சஞ்சிகையில் பிரசுரமானது.
இலண்டன் தமிழ் வானொலி அனுபவக் குறிப்பாகவும் ஒலிபரப்பானது.)
30. கரையேற்றும் கலங்கள்.
26 Jan 2012 18 மறுமொழிகள்
கரையேற்றும் கலங்கள்.
இருவேறு பாதைக்காரர்
ஒருசேரப் பயணிக்கும்
பருவத்தின் பாடலுக்கொரு
உருவமீயும் அரிய
பிருந்தாவனம் இல்லறம்.
பெரும் சாகரமில்லறம்.
அளியும் (வண்டு), பூவுமாய்
விழியும் இமையுமாய்
மொழியும் சுவையுமாய்
வழியும் தோழமை
பொழிவது இல்லற
ஆழிப் படகோட்டம்.
களம் பெறுமுரையாடல்
வளமான புரிந்துணர்வு
வசந்த ஊருக்கு வழிகாட்டி.
உளமார ஏற்றுக் கொள்ளல்
தளராது விட்டுக் கொடுத்தல்
கலமாகும் இன்பக் கரைசேர.
சின்னஞ் சிறிசு தான்
மன்னிப்பு எனும் கலம்
என்னமாய் உதவிடும்!
தடுமாறலும், தரை நிற்றலும்
எடுக்கும் மனதின் சார்பு.
இடுக்கண் வராத தேர்வு.
தடம் புரண்டு சிலர்
தடுமாறும் போதில் நன்கு
தடுத்தாண்டு கரை சேரக்
கை கொடுக்கும் கலங்களாகக்
குடும்ப ஆலோசனை மன்றம்,
நகர பாதுகாவல் நிலையம்.
ஊடல் சிறிதானால் அன்பின்
கூடல் ஊர் ஏகும்.
பாடல், பகிடி, ஆடல்,
நாடும் சுற்றுலா என்பன
தடம் மாறும் இல்லறத்தை
இடம் காட்டும் கரையேற.
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
2007.
31. போர்க்களம்.(காதல் கவிதை)
24 Jan 2012 21 மறுமொழிகள்
போர்க்களம்.
(போர்க்களம்..போர்க்களம்…காதலென்னும் போர்க்களம்..)
வளைந்த புருவத் தூண்டிலினால்
வளைத்து என்னாவியைச் சொருகுகிறாள்
துளைப்பது மன்மத வில்லோ!
களிப்பு இன்பக் கலவரமோ!
இமை அழகே இனியவளே!
அமைவான அழகு வலை!
இமை வில்லில் எதையிணைத்து
சுமையற்ற மயக்கம் தந்தாள்!
வாலிபக் காதலரங்க இதழ்களில்
கலாப நடன ஆலாபனையோ!
இதழ் குளத்தில் வீழ்த்தியென்னை
இமைப் புதரால் வளைக்கிறாள்.
கன்னமிட்டுக் கவிதை படிக்க
கன்னச் சுழியுள் சுழற்றுகிறாள்.
கைச்சிறையுள் கட்டி என்னை
மைவிழியுள் அமிழ்த்திக் கொள்வாள்.
மார்பின் மென்மையாலென்னை
சேர்த்துப் பக்கம் சாய்க்கிறாள்.
இடையின் படையெடுப்பிற்கொரு
தடையிடாத் தர்ம தேவதையாள்.
பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-1-2012.
குறட்டாழிசை 22. அறம்.
21 Jan 2012 17 மறுமொழிகள்
வாழ்வியற் குறட்டாழிசை 22.
அறம்.
வன்சொல், கோபம், பொறாமை என்பவை
இன்றி ஆசையறுத்தல் அறமாம்.
ஒழுக்கம் சார்ந்த நன்னடத்தை, நீதி
வழுவாத தன்மையும் அறமே.
நற்பண்பை உணர்த்தும் தர்மம், ஒழுங்குடை
நல்வழி வாழ்வியல் அறமாகும்.
அறம் பேணுதல் மனித வாழ்வில்
மறம் பல தரும்.
(மறம் – வலிமை,வீரம், வெற்றி என்ற கருத்தில்)
அறமுடை வாழ்வைப் புறம் தள்ளல்
நிறமற்ற வாழ்வுப் பாதையாகும்.
நெறியுடைய அறவாழ்வு பெரும் குடி
வெறியனிற்கு ஒத்து வராது.
அறமெனும் பல்லக்கில் ஏறுவோனின் வாழ்வரசு
திறமான செங்கோல் உடையது.
அறமெனும் விருட்சத்து வேராளன் மனிதன்
அறமீறலில் இன்று அத்திவாரமிடுகிறான்.
இலட்சியக் கோலோச்சும் அற வரலாறு.
அலட்சிய வரலாறு அறமீறல்.
பால பருவத்திலிருந்து அறம் போதிப்பு
சீலமுடை வாழ்விற்கு அரண்.
ஆறறிவு – மனிதர்¬ – அறம் – பொருத்தமானது.
கீழறிவாளராய் மாறுவதே விந்தை!
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-1-2012.
29. வாழ்த்து விரயமாகாது!…
19 Jan 2012 24 மறுமொழிகள்
வாழ்த்து விரயமாகாது!…
முன்காலை வேளையில்
முதல்வரியாய் மனதிலே
முழு ஊக்கம் தருகிறாய்!
கழுவிடுதே சோம்பல்
வாழ்த்து வரி தூவுகிறாய்!
வீழ்த்திடா உரமேற்றுகிறாய்!
தாழ்த்திடா உன் செயலினால்
வீழ்த்துகிறாய் ஆனந்தத் தூறல்!
சுடச்சுடத் தருகின்ற உன்
சுந்தர வரிகள் அழகு!
மந்திரக் கருத்துகள் ஆகி
மயக்கிடுதே தினமென்னை
வாழ்த்திடும் நல்ல மனம்
வாழ்வதில்லைப் பலரிடம்.
காழ்ப்பில்லா மனம் மகிழ்வகம்
வாழ்த்து நூலகம் நீ!
நன்மை நெஞ்சின் வரிகள்
நாவார, மனசார உதிரும்.
வாழ்த்து விரயம் ஆகாது
வாழும் விருட்சம் ஆக்கும்!
வாங்கி அடுக்கும் வாழ்த்துகளை
தேங்கிட வைக்கலாம் கோபுரமாய்!
பூங்காவாய்ப் பூக்கும் மனசு
பாங்காய்த் திருப்பிக் கொடுக்கும்!
ஒரே சொல்லில் பேரலையாய்
ஊரே போற்றும் கருத்துகள்
நேரே உயர்த்தும் ஏணியாய்
பாரே பார்க்கச் செய்யும்!
வாழ்த்திடாப் பல உள்ளங்களும்
வாழ்ந்து சுகிக்கும் பூவுலகு.
வாழ்த்துமொரு மனமெனக்கு
வளமாய் வரமாய் வேண்டும்!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
19-1-2012.
21. சிறு துரும்பும்..
17 Jan 2012 21 மறுமொழிகள்
சிறு துரும்பும்..
(13-8-2005ல் இலண்டன் தமிழ் வானெலியின் புதன் இலக்கிய நேரத்திற்காக எழுதி ஒலிபரப்பாகியது)
(இது எனது 675 வது ஆக்கம்.)
” சிறு துரும்பும் பல் குத்த உதவும்” இவ்வார்த்தைத் தொடர் அஃறிணையான உயிரற்ற பொருட்களுக்காகச் சொல்லப்பட்டது போன்று மயக்கம் தந்தாலும், உயர் திணையான மனித சமுதாயத்திற்கும் பொருத்தமான வாக்கியமாகும்.
சிறு ஆணி, மூடி, கயிற்றுத் துண்டைக் கூடப் பத்திரப் படுத்தினால் ஏதோ ஒரு அவசர தேவைக்கு மிக அபூர்வமாக அது உதவுகிறது. இதனால் பாவனைக்குரிய எப் பொருளையும் வீசாது பத்திரப் படுத்த வேண்டும் எனும் கருத்துடன் கூறப்பட்ட வசனம் இதுவென்றும் கருதலாம்.
உலகில் ஒருவரை யொருவர் மதித்து வாழ்ந்திட வேண்டும். அலட்சியம் செய்தலெனும் அருவருப்பான குணத்தை விலக்கி வாழ்ந்திட வேண்டும்.
மனிதர்கள் துண்டு துண்டாகப் பிளவு பட்டுத் தனித் தனித் தீவுகளாக வாழ்ந்திடல் கொடுமையானது. சேர்ந்து வாழ்ந்திடல் பல வகையில் நன்மையாகிறது.
இதற்கு எல்லோரும் பெரிதாக விரும்புகின்ற கூட்டுறவு செழித்து வளர்ந்திட வேண்டும். இந்தப் பொது நன்மை உலகில் செழித்து வளர்ந்திட, மனிதம் வாழ்ந்திட நல்ல சிந்தனை ஊற்றாக, காயம் படாத சிந்தனையூற்றாக, ஊறுபடாத எண்ணக் கருத்தாக முன்னோர் மிகவும் ஆழமாகச் சிந்தித்துக் கூறிய வாக்கியமே
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
இவ்வார்த்தையை மதித்து வாழ்ந்திட்டால் மனிதர்கள் பல நன்மைகள் பெற்றிடலாம்.இதை மதிக்காதவர்கள் இவ் வார்த்தையைத் தூக்கி வீசலாம். ஒதுக்கியும் கொள்ளலாம்.
இன்றைய நவீன வாழ் முறைப்படி நன்மை தீமைகளை விளக்கிக் கூறும் போது, தெரிவு என்பதை சுயமாக எடுத்தல் வாழ்வாகிறது.
நான் உயர்திணை. மனிதப் பெறுமதியை இதன் மூலம் கையாண்டு கொண்டேன்.
அருவருப்பான அலட்சியம் விலக்க
பெருவிருப்பான கூட்டுறவு செழிக்க
கூறுபடாது மனிதம் வாழ்ந்திட
ஊறுபடாத சிந்தனை ஊற்றாய்
வேறுபாடின்றி விதைத்த வார்த்தை
சிறு துரும்பும் பல குத்த உதவும்.
அதைக் குறுக்காக கிழித்தும் வீசலாம்
கிறுக்குடன் தீயும் வைக்கலாம்.
பிடித்தவர்கள் முன்னதையும், பிடிக்காதவர்கள் பின்னதையும் கொள்ளலாம்.
தெரிவு என்பது அவரவர் சுயப் பிரிவு.
விதித்து வந்த பிறவியோ
உதித்தாய் உயர் மனிதனாக
மிதித்து வாழாது மனிதம்
மதித்து வாழ்! தர்மம்
பதித்து வாழ் நெஞ்சில்!
துதிக்கும் உலகு உன்னை.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-8-2005.
28. தைத் திங்கள்.
14 Jan 2012 24 மறுமொழிகள்
தைத் திங்கள்.
தைத்திங்கள் வையகத்தில் மறுபடியாக
வைத்தது புதிய காலடியாக.
கைராசிச் சங்கதிகள் தொகையாக
கையேந்தி வரட்டும் எளிதாக.
நைந்தாலும் நப்பாசையில் எதிர்பார்க்கும்
தையிது அதிட்டத் திங்களென்றும்
கைவரிசை காட்டி வந்திடட்டும்!
கை குலுக்கட்டும் நம்பிக்கையுடனும்.
மட்டில்லா மகிழ்ச்சித் தைப்பொங்கல்!
எட்டியது புத்தரிசிக்கு – நன்றியுணர்விற்கு!
பட்டிப் பொங்கல் உதவும் ஆவினத்திற்கு
கட்டுக் கரும்புடன் சூரியப்படையலாக!
பறக்கும் சிறகுடன் சிலோனை நாடி
உறவெனும் தேசிய கீதம் பாடி
சிறக்கப் பொங்குவோம் ஒருநாளில்
சிரிக்கப் பொங்குவோம் நம் அரண்மனைகளில்.
பொங்கலோ பொங்கலென எல்லோருக்கும்
பொங்கட்டும் இன்பங்களும் இல்லத்தில்!
பொங்கல் வாழ்த்துகள் ஏந்துங்கள்!
பொங்கலோ பொங்கலென வாழ்த்துகிறோம்!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
(1-2-2004ல் ரி.ஆர்.ரி தமிழ் அலையில்
14-1-2006ல் இலண்டன் தமிழ் வானொலியில்
என்னால் வாசிக்கப் பட்டது.)
another pongal poem in anthimaalai web site:- http://anthimaalai.blogspot.com/2012/01/blog-post_3662.html#comment-form
20. வேண்டிய நேரம் கொடுங்கள்.
12 Jan 2012 14 மறுமொழிகள்
வேண்டிய நேரம் கொடுங்கள்.
(30-4.2005ல் இலண்டன் தமிழ் வானொலியின் ஓடி விளையாடு பாப்பா அனுபவக் குறிப்பில் ஒலி பரப்பானது.)
பிள்ளைகள் பல விதம். உணவு விடயத்தில் சில பிள்ளைகள் அடம் பிடிப்பவராகவோ, வித்தியாசமானவராகவோ, பிடிவாதமானவராகவோ இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்களா!
அப்படி அல்ல. அவர்களுக்கு வித்தியாசமான உணவைப் பழக்கிக் கொள்ள நல்ல நேரம் தேவை.
நாம் ஓரிரு தடவைகள் புது உணவைக் காட்டி விட்டு, பிள்ளைக்கு இது பிடிக்கவில்லை என்கிறோம் மிக எளிதாக.
ஒரு அமெரிக்க ஆய்வின்படி ஒரு புது உணவை ஒரு குழந்தைக்கு பத்துத் தடவைகள் அறிமுகப் படுத்த வேண்டுமெனக் கண்டுள்ளனர்.
118 குடும்பங்களை ஒரு வருடமாக அவதானித்துக் கண்டது யாதெனில், இவர்கள் புது உணவை ஆக இரண்டரைத் தடைவை மட்டுமே அறிமுகப் படுத்துகிறார்களாம். இரண்டரைத் தடைவ மட்டுமே பரிமாறுகிறார்களாம்.
ஆகையால் பத்துத் தடவையளவில் புது உணவைப் பரிமாறுங்களேன்! வெற்றியடைவீர்களா என்று பாருங்களேன். உங்களுக்கு நல்லதிஷ்டம் கிடைக்கட்டும்.
(கீழ் வரும் ஆக்கம் 11-10-2005ல் ஒலிபரப்பானது.)
சுத்தமாக.. மெத்தமும்… புதிதாக்கலாம்
சித்தம் புத்துயிர்க்க
நித்தம் சுத்தம்
உத்தம சொத்தாகும்.
சுத்தம் சுகம் தரும்
தத்தம் பிள்ளைகள் மொத்த விளையாட்டுப் பொருட்களையும் வாயால் சுவைப்பார்கள், அன்புடன் முத்தமிடுவார்கள். சொத்தான அவர்கள் ஆசைப் பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கம் உங்களிற்கு இருக்கிறதா?
இரு வாரத்திற்கு ஒரு முறையோ, அன்றி அடிக்கடி இவைகளைச் சுத்தம் செய்தல் அவசியமானதாகிறது. நோயுற்ற போது, கிருமிகள் படிந்து, அவை மீண்டும் மீண்டும் தொல்லைகள் தராது இருக்கவும், மொத்தமான சுகாதாரத்திற்கும் இவற்றைக் கழுவுதல் மிகப்பயனுடைத்து.
லீகோ கட்டைகளைப் பாத்திரங்கள் கழுவும் யந்திரத்திலிட்டுக் கழுவலாம். பூனை நாய்க் குட்டிப் பஞ்சுப் பொதிப் பொம்மைகளைத் துணி கழுவும் யந்திரத்திலிட்டுக் கழுவலாம்.
தண்ணீரில் விளையாட எந்தப் பிள்ளைக்கும் கொள்ளை ஆசை தான். தண்ணீரில் விளையாட ஆசையுள்ள பிள்ளைகளைப் பெரிய வாயகன்ற கிண்ணத்தில் சிறிது சவர்க்காரமிட்ட நீரில் விளையாட்டுப் பொருட்களைப் போட்டு விருப்பப் பிரகாரம் அவைகளைக் கழுவி விளையாட விடலாம்.
விளையாடி முடிய நிலத்தையும், பிள்ளையையும் துடைத்து விடலாம். விரும்பினால் பொருட்களை நீங்களும் இறுதியில் கழுவலாம், அல்லது பிள்ளைகளிடமே தண்ணீரை மாற்றி உதவி செய்து அவர்களையே துடைக்கவும் விடலாம்.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள்.
குழந்தைகளுக்கு இது விளையாட்டாகவும், பொருட்கள் சுத்தமானதாகவும் ஆகிறது.
முயன்று பாருங்களேன்!
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-10-2005.
26. நாக்கு காக்க….
10 Jan 2012 31 மறுமொழிகள்
நாக்கு காக்க….
ஆக்கும் மொழித் துடுப்பு
மூக்கின் கீழாம் நாக்கு – நா
காக்கும் வழியின்றிச் சிலர்
தாக்கும் சீக்கு வழியுடையார்.
ஓர் இனிய மொழியின்றி
ஒரு கூட்டுறவு ஏன்!
துருதுருத்து உழலும் நாக்கிற்கு
உருவாகாதோ தினம் களைப்பு!
ஒரு நிமிடத்துக் கிண்டல்கள்
ஒரு நாளின் சுடு சொற்கள்
பொருளற்ற கடுப்பு மொழிகள்
விருந்தோ! மருந்தோ! பயனெதுவோ!
கொலை! ஒரு நாக்கால்
தொலைவது பிறர் நிம்மதி!
நிலையின்றிச் சுழலும் நரம்பற்ற
விலையற்ற சுடுகலன் இது.
மனிதப் பிறப்பு மகத்தானது
தொனிக்கும் மொழி உயர்வானது.
இனிக்கப் பேசி வாழ்வை
இதமாக வாசித்துச் சுகிப்போம்!
ஆக்கியவன் நாக்கை எமக்கு
வைக்காவிடில் வாழ்க்கைப் போக்கின்
சூக்குமம் சிக்கல் பக்கமே.
காக்க நாவினைக் காக்கவே!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-1-2012.
26. அதிசயம்!…அபூர்வம்!…
08 Jan 2012 28 மறுமொழிகள்
அதிசயம்!…அபூர்வம்!…
அறிவினுயர்வில் அன்பெனும் (பிறப்பு)
அணுகுமுறை அணியிடும்
அதிசய மானுட உயரமைப்பு
அதிசயம்! அபூர்வம்!
அமரத்துவ நிறைவளிக்கும் (உறவு)
அகங்காரமில்லாச் செறிவு
அமைதி தருமுறவு
அதிசயம்! அபூர்வம்!
அவனியில் கொய்யும் (அனுபவம்)
அனுபவங்களால் நெய்யும்
அன்பு வலையின் அதிசய
அர்த்த மாயைகள் அபூர்வம்!
அகவிதழ் விரிக்கும் (அன்புச் சுகந்தம்)
அன்பு மகரந்தத் துகள்கள்
அனுப்பும் இனிய சுகந்தம்
அன்னியம் விலக்கல் அபூர்வம்!
அன்பொரு வியாபாரமாய் (போலி அன்பு)
அர்த்தமற்ற அணுப்பொருளாய்
அர்த்தம் காண்பதிலில்லை
அதிசயம்! அபூர்வம்!
அன்பை அருவியாய்க் கொட்டி (நட்சத்திரமாகுதல்)
அகிலத்தோர் வரிசையில்
அடிச்சுவடாய், நட்சத்திரமாதல்
அதிசயம்! அபூர்வம்!
இத்தனையும் உணர்ந்து (வாழ்தல்)
உத்தமமாய் வாழ்தல்
இகத்தினிலே இனிய
அதிசயம்! அபூர்வம்!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-7-2005.
(இக் கவிதை இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலிகளில் என்னால் வாசிக்கப் பட்டது)







































![[wallcoo_com]_Baby_Photography_of_%20A%20baby%20with%20hat_ISPC006065](http://kovaikkavi.files.wordpress.com/2012/01/wallcoo_com_baby_photography_of_20a20baby20with20hat_ispc006065.jpg?w=535&h=334)





















