
தனிமை.
” தனிமையை ரசி!” என்று ஒரு கவிதையை இதற்கு முன்னர் எழுதிவிட்டு இது என்ன மறுபடியும் என்று எண்ணுவது இயல்பு.
சமீபத்தில் எழுதியது – தனிமையை ரசி.
தனிமையை நான் ரசிப்பதுண்டு. இதே நேரம் கூட்டுறவும் பிடிக்கும்.
இப்போது தருவது 2004ல் யான் எழுதி ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் வாசித்தது.
பின்னர் 2005ல் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி) யேர்மனிய கலைவிளக்கு சஞ்சிகை பிரசுரித்தது.
2006ல் சி.ஐ.ரிவியில் நான் தொலைபேசி மூலம் வாசித்தது.
சில சொல்லிணைப்பின் திருத்தத்துடன்
இப்போது ரசியுங்கள்!…….
தனியன் நீயென்று தவிப்பது ஏன்!
இனியன் நீயென்று நினைத்திடு தேன்!
தனிமையோடொரு பட்டிமன்றம் வீண்!
இனி–மை போடுன் பேனாவுக்குத் தான்.
ஏக்கமெதற்கு தூக்கியுதறிடு!
ஏதேனுமியக்க நிலையில் ஈடுபடு!
இயக்கத்தில் மனதைப் பதியவிடு!
இணைந்து ரசனையில் மனம் மயங்கிடு!
ஊனம் கொண்ட அறிவினிறக்கம்
ஞானம் கழன்ற உணர்வினேக்கம்.
சுய இயக்கம் சுயதிருப்தியினூக்கம்
வியக்க வைக்கும் மனநிம்மதித் தேக்கம்.
பூ மலர்ந்த மணம் பரப்பும் தனியே.
பூமி சுழன்றுவரும் இயக்கமும் தனியே.
பூப்படையும் பெண்ணிலையும் தனியே.
பூமத்தியரேகையெனும் மதிப்பும் தனியே.
பிறப்பிலும் வாழ்வில் மனிதன் தனியே.
இறப்பிலும் இறுதியில் மனிதன் தனியே.
மறப்பதேன்! சுயம்பிக்கைக் கொடியேற்று!
திறப்பதுன் மன மகிழ்வினூற்று.
தவிப்பு நிலை தருமிந்திரியங்களோடு
தகர்த்தெறிந்து வழக்கை விலக்கு!
தனிமையைத் தணிவோடு கையாண்டு கலக்கு!
தத்துவமாயுன் வாழ்வைத் துலக்கு!
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-2-2004.

0.000000
0.000000